ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

author img

By

Published : Aug 9, 2023, 5:19 PM IST

Etv Bharat
Etv Bharat

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூன்றாவது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின்போது சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான கேள்விகள் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்த போது வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்த விவகாரத்தில் சட்டவிரோதமாக 1.64 கோடி ரூபாய் செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கரூர் மற்றும் சென்னையில் உள்ள 5 வங்கிக் கணக்குகளையும், அவரது மனைவி மேகலாவிற்கு உள்ள 4 வங்கிக் கணக்குகளையும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில் பல பேருக்கு கடன் கொடுத்திருப்பதையும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குறித்து, அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் கரூரில் பல கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பங்களாவை பற்றிய தகவல் தெரிய வந்ததையடுத்து அமலாக்கத்துறையினர் தற்போது பங்களாவிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில்பாலாஜியிடம் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்துவதாக அமலாக்கத்துறையினர் கூறுகின்றனர்.

செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையில் எந்தவிதமான முதலுதவி செய்யும் வசதிகளும் அமலாக்கத்துறையிடம் இல்லை என நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தற்போது இரண்டு செவிலியர்கள் மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவர்கள் ஷிஃப்ட் முறையில் செந்தில்பாலாஜியை கவனித்து வருகின்றனர். அவர் காலை மற்றும் இரவு நேரத்தில் என்ன மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்பதையும், விசாரணைக்கு நடுவே சீரான உடல் நிலை உள்ளதா எனவும் மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் அசைவ உணவை செந்தில்பாலாஜி தவிர்த்து வருவதால் அவருக்கு வீட்டிலிருந்து சைவ உணவு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் செந்தில்பாலாஜியிடம் இரவு நேரத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தவில்லை. 9 மணி வரை மட்டுமே அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இரவு நேரத்தில் உறங்க தனி அறை அமைத்தும் காலை நேரத்தில் அலுவலகத்திலே நடைபயிற்சி மேற்கொள்ள அமலாக்கத்துறையினர் அனுமதி வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணையானது வருகிற 12ஆம் தேதி வரை நடைபெறும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்பாக அவதூறு பரப்பிய வழக்கு - எஸ்.ஜி.சூர்யா நேரில் ஆஜர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.