சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் 61-வது மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கடந்த 5, 6 ஆம் தேதிகளில் நடைபெற்றன.
நீச்சல், கிராஸ் கன்ட்ரி, தடை தாண்டுதல் மற்றும் சைக்கிளிங் ஆகிய போட்டிகள் நடைபெற்றதில், தனித் தனியாகவும், குழுவாகவும் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
பரிசளிப்பு நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் பதக்கங்கள், கோப்பைகளை வழங்கினர்.
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் சென்னை காவல்துறை அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தட்டிச் சென்றது. ஆடவர் பிரிவில் இரண்டாம் இடத்தை கமாண்டோ படை அணியும், மகளிர் பிரிவில் இரண்டாம் இடத்தை மத்திய மண்டல காவல்துறை அணியும் பிடித்தனர்.
கருத்துக் கேட்பு கூட்டம்
இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை அணிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது தனக்கு பெருமையளிப்பதாக தெரிவித்தார். மேலும், பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த காவல்துறை வீரர், வீராங்கனைகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் குறைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.
காவல்துறையில் இருந்து வீரர்கள்..
பின்னர் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, "தமிழ்நாடு காவல்துறைக்கென மிகப்பெரிய விளையாட்டுப் பாரம்பரியம் உள்ளது. அதைத் தொடர்ந்து ஊக்குவிக்க தமிழ்நாடு காவல்துறை உறுதுணையாக இருக்கும்.
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஹாக்கி அணி அதற்கு முன்னதாக காவல்துறை ஹாக்கி அணியிடம் தோல்வியுற்றது. இந்தியா பாரம்பரியமிக்க ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு தமிழ்நாடு காவல்துறையில் இருந்து வீரர்கள் உருவாகி வருவது பெருமையளிக்கிறது" என்றார்.
குறிப்பாக அவர், 1896 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் தொடங்கி 2021 ஆம் ஆண்டு டோக்கியோ வரை இதுவரை நடந்த 28 ஒலிம்பிக் போட்டிகளின் பட்டியலைக் கூறிவிட்டு.. இவ்வளவுதான் தெரியும் என்றபோது, அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதையும் படிங்க: உக்ரைனிலிருந்து வெளியேற இந்திய டாக்டரின் நிபந்தனை - ஆடிப்போன அதிகாரிகள்