ETV Bharat / international

உக்ரைனிலிருந்து வெளியேற இந்திய டாக்டரின் நிபந்தனை - ஆடிப்போன அதிகாரிகள்

author img

By

Published : Mar 7, 2022, 8:29 PM IST

Updated : Mar 7, 2022, 10:46 PM IST

உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டுமானால், தன்னுடைய வளர்ப்பு சிறுத்தைகளையும் அழைத்துச் செல்ல வேண்டும் என இந்திய மருத்துவர் ஒருவர் நிபந்தனை விதித்துள்ளார்.

ukraine, indian doctor condition panther pet leopard  embassy
உக்ரைனிலிருந்து வெளியேற இந்திய டாக்டரின் நிபந்தனை-ஆடிப்போன அதிகாரிகள்

டான்பாஸ்(உக்ரைன்): போர்க்கள பூமியான உக்ரைனிலிருந்து 'விட்டால் போதும்' எனப் பலரும் பறந்து கொண்டிருக்க, இந்திய மருத்துவர் ஒருவரோ தூதரக அதிகாரிகளிடம் நூதன நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

'என் செல்லப்பிராணிகளை அழைத்துவர அனுமதித்தால் தான் நாடு திரும்புவேன்' என்பது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் வசிக்கும் மருத்துவர் கிரிகுமார் பாட்டீலின் நிபந்தனை. சரி நாய், பூனைகளையெல்லாம் அழைத்துச்சென்றுள்ள அனுபவம் உள்ளதால், என்ன பிராணி என அதிகாரிகள் கேட்டுள்ளனர். என்னிடம் இருப்பதும் பூனைதான், ஆனால் கொஞ்சம் பெரிய பூனைகள் என்றிருக்கிறார். சற்றே கிலியுடன் அதிகாரிகள் விசாரித்த போதுதான், பாட்டீலின் செல்லங்கள் இரண்டும் சிறுத்தைப் புலிகள் என்பது தெரியவந்தது. ஆறு படுக்கையறைகள் கொண்ட பிரமாண்ட வீட்டின் தரைத்தளத்தில் தான் இந்த செல்லங்களுடன் வசித்து வருகிறார், பாட்டீல்.

"சிறுத்தைகள் இல்லை சின்ன குழந்தைகள்"

ரஷ்ய எல்லையிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கும் கிரிகுமார், தனது பகுதியை ரஷ்ய ராணுவம் சூழ்ந்துள்ளதாகவும், தற்போதைக்கு அங்கு வசிக்கும் ஒரே இந்தியர் தான்தானென்றும் கூறுகிறார். மீட்புக்காக இந்திய தூதரக அதிகாரிகளை பலமுறைத் தொடர்பு கொண்டபோதும் சரியான பதில் கிடைக்கவில்லை என சலித்துக்கொள்கிறார். இருப்பினும் தன்னுடைய செல்லப்பிராணிகளை குழந்தைகள் போல கருதுவதால் அவற்றை விட்டுவிட்டு வருவது இயலாத காரியம் என்கிறார், பாட்டீல். சிறுத்தைகளை செல்லமாக வளர்க்கும் இவரை நண்பர்கள் ஜாகுவார் குமார் என்றே செல்லமாக அழைக்கின்றனர்.

சிறுத்தைகளைத் தத்தெடுத்தது எப்படி?

ஆந்திராவின் டனுகு பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கிரிகுமார் பாட்டீல், உக்ரைனில் மருத்துவம் படிப்பதற்காக 2007ஆம் ஆண்டு சென்றுள்ளார். 2014ஆம் ஆண்டு படிப்பை முடித்தபின் அங்கே உள்ள அரசு மருத்துவமனையிலேயே பணிபுரிந்து வருகிறார். 2019ஆம் ஆண்டில் இவருக்கு திடீரென எழுந்த ஆசையின் விளைவுதான், இந்த மிகப்பெரிய செல்லப்பிராணிகள்.

சுமார் 20 மாதங்களுக்கு முன்னர், ஆண் சிறுத்தைப்புலியான யாஷாவை கீவ் நகரின் உள்ளூர் மிருகக்காட்சி சாலை ஒன்றிலிருந்து சட்டவிதிகளுக்குட்பட்டு தத்தெடுத்துள்ளார். பெண் கருஞ்சிறுத்தையான சப்ரினா, யாஷாவுக்கு வாழ்க்கைத்துணையாக 2 மாதங்களுக்கு முன்புதான் வாங்கப்பட்டது.

உக்ரைனிலிருந்து வெளியேற இந்திய டாக்டரின் நிபந்தனை - ஆடிப்போன அதிகாரிகள்

இரு சிறுத்தைகளையும் வாங்குவதற்காக இந்திய மதிப்பில் சுமார் 26 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார், இந்த மருத்துவர். சிறுத்தைகள் மட்டுமின்றி 3 நாய்களையும் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார், கிரிகுமார் பாட்டீல். மருத்துவம் மட்டுமின்றி செல்லப்பிராணிகளுடன் இவர் நடத்தி வரும் யூ-ட்யூப் சேனலை சுமார் 85 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். குடும்பத்தினரை இந்தியாவில் விட்டுவிட்டு, செல்லப்பிராணிகளையே குடும்பமாக கருதி வளர்த்து வரும் கிரிகுமார் பாட்டீல் தனது செல்லப்பிராணிகளுக்காக அடம் பிடிப்பதில் வியப்பேதும் இல்லை.

இதையும் படிங்க: காதலுக்காக கர்நாடகா சென்ற அமைச்சர் சேகர் பாபுவின் மகள்!

Last Updated :Mar 7, 2022, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.