ETV Bharat / state

ETV Bharat 2022 Roundup: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செய்ததும், செய்யத் தவறியதும்!

author img

By

Published : Dec 27, 2022, 5:33 PM IST

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 2022இல் செய்தது என்ன? தவறவிட்டது என்ன?
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 2022இல் செய்தது என்ன? தவறவிட்டது என்ன?

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 2022ஆம் ஆண்டில் செய்த நலத்திட்டங்களையும், தவறவிட்ட முக்கியமான திட்டங்களையும் காணலாம்.

சென்னை: தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, 15 முதல் 17 வயதுடையவருக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் ஜனவரி 3ஆம் தேதியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10ஆம் தேதியும், 12-14 வயதுடையவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் மார்ச் 16ஆம் தேதி அன்றும் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஒற்றை இலக்கத்தில் வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மனநல ஆலோசனை: அந்தத் திட்டத்தின் கீழ் 99 லட்சத்து 47,310 பயனாளிகளும், தொடர் சேவையை 2 கோடியே 34 லட்சத்து 46,388 பேரும் டிசம்பர் 18ஆம் தேதி வரையில் பயனடைந்துள்ளனர். சாலை விபத்தில் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டத்திலும் 1,33,202 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, 118 கோடியே 48 லட்சத்து 54,579 ரூபாய் நிதி டிசம்பர் 18ஆம் தேதி வரையில் செலவிடப்பட்டுள்ளது.

மருத்துவப்படிப்பில் முதுகலையில் புதிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இளங்கலை மருத்துவப்படிப்பில் முதல் முறையாக தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டணத்தை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை குழுவிற்கு செலுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

இதனால் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டும் செலுத்தும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்களிடம் தற்கொலை எண்ணம் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, அவர்களுக்கு மனநலம் என்ற திட்டத்தின் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்கு மனநல நல்லாதரவு மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முதலிடத்தில் தமிழ்நாடு: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் மட்டும் அமைத்தாலும், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் மத்திய அரசிடம் 6 புதிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

நகர்புறங்களில் சுகாதர மையங்களை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான கருவிகள் வாங்கி வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. சுகாதரத்துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலம் என மத்திய அரசிடம் இருந்து விருதுகளை தமிழ்நாடு பெற்று வருகிறது.

நீட் விலக்கு எப்போது? மருத்துவர்களின் ஊதிய முரண்பாடு, பணியாளர் நியமனம் போன்றவற்றையும், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை முழுமையாக முடித்து திறக்கப்படாத அவலநிலை நிலவி வருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு என்பது இன்னும் பெற்றுத் தரப்படவில்லை.

மாநில அரசின் நிதியில் உருவாக்கப்பட்ட இளநிலை மருத்துப்படிப்புக்கான இடங்களை, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்காமல் தமிழ்நாடு மாணவர் சேர்க்கை மூலம் நிரப்பப்படும் என்ற வாக்குறுதி குறித்த எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

ஆனாலும் முதுகலை மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பெற்றுள்ளது. மருத்துவத்துறையில் பணியாற்றி வரும் மருத்துவர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான ஊதிய உயர்வு பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை.

மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரும் நிரந்தரப் பணியில் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்படவில்லை. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்கும் அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது.

மருத்துவமனைகளில் துப்பரவு பணிகளை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனங்களின் மூலம் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக அரசு மீது அதிருப்தி.. போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.