ETV Bharat / state

‘நாடாளுமன்ற தேர்தலில் வெல்லப்போவது திமுக தான்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 10:24 PM IST

ஸ்டாலின்
Stalin

திருமண விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெல்லப்போவது திமுக தான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை” என பேசியுள்ளார்.

சென்னை: சென்னையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.09.2023) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய் அவர்; “கரானோ என்ற பெரும் நோய் தொற்றிய காலத்தில் உலகமே சிக்கித் தவித்த நேரத்தில் நமது தமிழ்நாடும் சிக்கித் தவித்தது என்பதை மறந்திருக்க மாட்டீர்கள்.

கரோனா காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த அட்சி அதிமுக ஆட்சி. அவர்கள் ஆட்சியில் இருந்தார்களே தவிர, கரோனாவை கட்டுப்படுத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டார்களா என்று கேட்டீர்கள் என்றால் இல்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கட்சியாக இருந்த போது மக்கள் பணியை எந்த அளவிக்கு ஆற்றியிருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம், கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு துணை நிற்கக்கூடிய வகையில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக மக்களுக்கு என்னென்ன தேவைகள் ஏற்படுகிறதோ, அவை அத்தனையும் செய்து கொடுத்த ஒரு கட்சி தான் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய திமுக என்பதை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

அதில் ஓரளவிற்கு வெற்றி பெற்றோம் என்று சொன்னால், தங்கபாண்டியன் போன்றவர்கள், அவருடைய இராஜபாளையம் தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் எல்லாம் தலைமைக் கழகத்தின் மூலமாக நானும் அறிந்தேன். அதற்கான பாராட்டுக்களை இந்த நேரத்தில் தங்கபாண்டியனுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

திமுக-வை பொறுத்தவரைக்கும், ஆட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இல்லையென்று சொன்னாலும் சரி, மக்களைப் பற்றி சிந்திக்கின்ற, மக்களைப் பற்றி கவலைப்படுகிற ஒரு கட்சி தான் திமுக. அதனால் தான் தொடர்ந்து வெற்றியை நாம் இன்றைக்கு பெற்று வருகிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப் பெரிய வெற்றி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள். அதற்குப் பின்னால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 6வது முறையாக நம்முடைய திமுக ஆட்சி வருவதற்கு மக்கள் சிறப்பான ஆதரவை தந்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு, உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அந்த உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். அதற்குப்பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றோம்.

இப்படி தொடர்ந்து வெற்றியை பெறுவதற்கு காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை, என்னென்ன பணிகளை மக்களுக்கு செய்யப் போகிறோம் என்று வாக்குறுதிகளை தந்தோம். அதை நம்பி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு ஆதரவு தந்தார்கள். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை இன்றைக்கு படிப்படியாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.

இன்னும் சொல்கிறேன் 100க்கு 99 சதவீதம் இதுவரையில் நாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். மீதம் இருக்கிற 1 சதவீதம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிறைவேற்றக்கூடிய திட்டமாகத்தான் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதையும் நான் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளகிறேன்.

இப்படி எத்தனையோ திட்டங்கள் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” மட்டுமல்ல, மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கு “விடியல் திட்டம்” என்ற பெயரில் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்கு பின் “புதுமைப் பெண் திட்டம்” பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் அதையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதேபோல், “நான் முதல்வன்” திட்டம் இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடிய, அவர்களுக்கு பயிற்சியை தரக்கூடிய, அந்தத் திட்டம் இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மேலும், வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் பெயரால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” காஞ்சிபுரத்தில், தொடங்கி வைக்கப் போகிறேன். அப்படி தொடங்கிவைக்கப்படுகின்ற நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், நம்முடைய அமைச்சர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்டு அந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இதில், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அந்தத் தொகையை வழங்குவதற்காக திட்டமிட்டு இருக்கிறோம். மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படயிருக்கிறது என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ளகிறேன்.

எப்படி தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியை நீங்கள் எல்லாம் உருவாக்கி தந்தீர்களோ, அதேபோல வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல், விரைவில் குறித்த நேரத்தில் வரப் போகிறதா? அல்லது அதற்கு முன்பே வந்துவிடுமா? என்ற ஒரு எண்ணம், சந்தேகம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. முன்கூட்டியே தேர்தல் வந்தாலும், புதுவையை சேர்த்து 40க்கு 40 என்ற கணக்குல் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சமீபத்தில் கூட இடைத்தேர்தல்கள் நடந்திருக்கிறது. நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடந்திருக்கிறது. கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் என்று இப்படி பல மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடந்திருக்கிறது. அப்படி நடைபெற்றிருக்கக்கூடிய இடைத்தேர்தல்களில் “இந்தியா” கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் தான் வெற்றி பெற்றிருக்கிறது.

பாஜக அங்கெல்லாம் தோல்வியை சந்தித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, ஒரு சில மாதங்களுக்கு முன்பு, அருகில் இருக்கக்கூடிய கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்தது. அதிலும், பாஜக வீழ்த்தப்பட்டு அங்கே நம்முடைய கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியே மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது.

இன்னும் சொல்லவேண்டும் என்றால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த ஏழு ஆண்டுகளில் எங்கெங்கெல்லாம் தேர்தல் நடந்திருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு, கேரளா, பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் என்று இங்கெல்லாம் நடைபெற்ற தேர்தலில் மத்தியில் இருக்கக்கூடிய பாஜக தோற்கடிக்கப்பட்டு அங்கெல்லாம் நம்முடைய கூட்டணிக்கட்சிகளாக இருக்கக்கூடியவர்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஏற்கனவே “இந்தியா” கூட்டணி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. பீகார், கர்நாடகா, மும்பை அகிய இடங்களில் நடைபெற்ற கூட்டத்தின் மூலமாக பல்வேறு முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி அமைக்கப்பட்டிருக்கக்கூடிய “இந்தியா” கூட்டணி வெற்றி பெற்றால் தான் இந்தியாவை நாம் காப்பாற்ற முடியும்.

எப்படி சட்டமன்றத் தேர்தல் மற்றும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தீர்களோ, அதேபோல், இந்தியா முழுவதும் அந்த வெற்றியை தேடித் தரவேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவையை சேர்த்து 40 இடங்களிலும், மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தாருங்கள், தேடித் தாருங்கள் என்று இந்த மணவிழா நிகழ்ச்சியின் மூலம் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட பாலியல் புகார்: "எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது" - சிபிசிஐடி-க்கு சராமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.