ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்.. "கோயில் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை" - இந்து சமய அறநிலையத்துறை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 6:04 PM IST

கோயில் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை
கோயில் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை

chidambaram nataraja temple: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அதை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய, கடந்த 2022ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி தமிழக அரசு அனுமதித்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்கும் விதத்தில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டு, பொது மக்களின் பங்களிப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில், ஒரு பொதுவான கோயில். தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறை ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக கனகசபை தரிசனம் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், கனகசபையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பக்தர்களை கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், கரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் மற்றும் தீட்சிதர்களுடன் கலந்தாலோசித்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கைகளை பரிசீலித்தும், கனகசபையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

கனகசபையில் தரிசனம் செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அதை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை, கனகசபை தரிசனத்துக்கு அனுமதி அளித்ததை எதிர்ப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது. மேலும், கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணை மூலம் தங்கள் உரிமை பாதிக்கப்பட்டதாக தீட்சிதர்கள் தெரிவிக்காத நிலையில், எந்த தகுதியும் இல்லாத மனுதாரரின் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் பதில் மனுவுக்கு, பதிலளிக்குமாறு மனுதாரர் தரப்புக்கு அவகாசம் வழங்கிய தலைமை நீதிபதி நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி, விசாரணையை வரும் டிசம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கின்போது அரசுக்குச் சொந்தமான கடைகளுக்கான வாடகை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது - தமிழக அரசு பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.