ETV Bharat / state

3வது முறையாக ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி.. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 3:15 PM IST

3 முறையாக ஜாமின் கோரிய செந்தில் பாலாஜி
3 முறையாக ஜாமின் கோரிய செந்தில் பாலாஜி

Minister Senthil balaji Bail: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, 3வது முறையாக ஜாமீன் கோரிய மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பெற்ற பணத்தை, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அடங்கிய, 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 13வது முறையாக நீட்டித்த நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை ஜனவரி 4ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க: 3வது முறையாக அமலாக்கத்துறையின் சம்மனை புறக்கணித்த டெல்லி முதலமைச்சர்..!

மேலும் சென்னை உயர் நீதிமன்றமும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக் கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உடல் நிலை காரணங்களை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க முடியாது என்றும், விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் 3வது முறையாக ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், தனக்கு எதிராக ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்டதை அடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.