ETV Bharat / state

‘பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 7:52 PM IST

Etv Bharat
Etv Bharat

madras high court condemns H.Raja : பெண்களுக்கு எதிராக பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை: பாரதிய ஜனதா கட்சி மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதே போல் ‘பெரியார் சிலையை உடைப்பேன்’ என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து வெளியிட்டதற்காகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

அவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணக்கு வந்தது. அப்போது, ஹெச்.ராஜா தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜ் ஆஜராகி, அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவி வழி செய்தி தான் என்றும் ஆதாரம் ஏதும் இல்லை என வாதிட்டார். பெரியார் சிலை உடைக்க வேண்டும் என்று ட்வீட் செய்தார் என்பதற்கும் ஆதாரம் சேகரிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

கனிமொழி எம்பி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும் அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி, ஹெச்.ராஜா மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

காவல் துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான் ஆஜராகி, அவருடைய பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்கக் கூடிய வகையில் உள்ளது என்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஹெச்.ராஜா இதுபோன்று சர்ச்சையாக பேசுவது முதல் முறை அல்ல என்றும் இதுபோல் கருத்துகளை கூறக்கூடாது. பெண்களை குறி வைத்து குற்றச்சாட்டுகளை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிராக உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியதையும் குறிப்பிட்டார். பின்னர், மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல்: நீதிபதி சந்துரு தலைமையிலான குழு 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.