ETV Bharat / state

பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல்: நீதிபதி சந்துரு தலைமையிலான குழு 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 4:15 PM IST

Updated : Aug 24, 2023, 4:34 PM IST

நீதிபதி சந்துரு தலைமையிலான குழு...
நீதிபதி சந்துரு தலைமையிலான குழு...

Tamil nadu government: பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் சாதி மத ரீதியான மோதல்களை தடுத்திடவும், இனப்பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, 6 மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவிற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் சாதிய மனப்பான்மையால் மாணவர்களிடம் வன்முறை சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் துவங்கிய சம்பவம் நேற்று திருவண்ணாமலை வரையில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மேலும் கல்லூரி மாணவர்களும் தங்களுக்குள் வன்முறை செயலில் ஈடுப்பட்டு வருகின்றனர். சமூகத்தில் நிலவும் போக்குத் தான் மாணவர்களிடம் சாதிய வன்மம் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

  • பள்ளி - கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.

    இந்தச் சூழ்நிலையை மாற்றிடத் தேவையான பரிந்துரைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளேன்.

    கல்வியாளர்கள்,… https://t.co/rTyEI1GVZH

    — M.K.Stalin (@mkstalin) August 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முதலமைச்சரின் அறிவிப்பாணை: திருநெல்வேலியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் கும்பல் தாக்கியதை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், "சில நாட்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் மாணவனின் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியது.

சாதி, மத பேதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் ஒரு சமுதாயத்தைப் படைத்து அனைத்துத் தரப்பு மக்களும் சமூக, பொருளாதார வளர்ச்சி பெற வேண்டுமென்ற நோக்கில் இந்த அரசு செயலாற்றி வருவதை மக்கள் அறிவர். இச்சூழ்நிலையில், இதுபோன்ற ஒரு சம்பவம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

எதிர்கால சமுதாயம் சாதி, மதம் போன்ற பிற்போக்குச் சிந்தனைகளற்று, சகோதர உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும்; புதிய தமிழ்நாடு படைத்திட வேண்டும் என்றெல்லாம் எண்ணி கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புப் பெருக்கம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் நாங்குநேரி சம்பவம் மூலம் சாதி, இனப் பிரச்சினைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கசப்பான உண்மை நமக்குத் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டவுடன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவர் குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அம்மாணவனின் உயர்கல்விச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.

இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.

இந்தக் குழு, இது தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத்
துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று. அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும்" என கூறியிருந்தார்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளரின் அரசாணை: இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், "முதலமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் வழிமுறைகளை வகுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படுகிறது.

இந்தக்குழு தனது அறிக்கையை 6 மாதங்களுக்குள் அளித்திட வேண்டும். மேலும் ஒரு நபர் குழு தற்பாெழுது இயங்கி வரும் (147, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை-4) என்ற வாடகை கட்டிடத்தில் தொடர்ந்து செயல்படும். இந்தக்குழு பள்ளி கல்லூரி மாணவர்களிடையே சாதி இன பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது குழுவின் விதிமுறைகளாகும்.

ஆக்கப்பூர்வமான முறையில் சாதி, இன பேதமற்ற சமூகத்தை உருவாக்க ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து, அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள், உந்துதல்கள் (Motivation) தொடர்பான அறிக்கைகள் அளித்திட வேண்டும்.

மாணவர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு ஏதுவான அமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க வேண்டும். இந்தக் குழு மேற்படி பொருள் தொடர்பாக, கல்வியாளர்கள் மாணவர்கள் சமூக சிந்தனையாளர்கள், பத்திரிக்கைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களை பெற்று அரசுக்கு அறிக்கையாக அளித்திட வேண்டும்.

இது குறித்து ஆழ்ந்த நோக்கமறிய இக்குழு காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல குழு, சிறார் நீதி வாரியம், சாதி அடிப்படையிலான வன்முறையில் ஈடுபட்டு தண்டனை பெற்ற சிறார் ஆகியோருடன் உரையாடி, தெளிவான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறை அரசிற்கு அளிக்க வேண்டும். இது தொடர்பாக அரசால் பரிந்துரைக்கும் அல்லது குழு தேவை எனக் கருதும் பொருண்மைகளையும் ஆய்வு செய்திட வேண்டும்" என அரசாணையில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக ஆசிரியர் மீது புகார்.. பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

Last Updated :Aug 24, 2023, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.