ETV Bharat / state

அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும்; டிஜிபியிடம் பாஜகவினர் கோரிக்கை

author img

By

Published : Jul 10, 2023, 3:20 PM IST

BJP leaders has requested the DGP to increase security for the Annamalai Padayatra
BJP leaders has requested the DGP to increase security for the Annamalai Padayatra

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் பாதயாத்திரைக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி பாஜகவினர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து தமிழக பாஜக மாநில துணைத்தலைவர்கள் சக்கரவர்த்தி, பால் கனகராஜ், அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் டிஜிபியை சந்தித்து அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்ளும் இடங்களின் விவரம் மற்றும் கூடுதல் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகின்ற 28-ஆம் தேதி “என் மண் என் மக்கள்” என்கின்ற தலைப்பில் பாதயாத்திரையை தொடங்க இருக்கிறார். ஜூலை 28-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி தலைநகர் சென்னையில் பாதயாத்திரை முடிய உள்ளது.

நானும் பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலரும் டிஜிபி அவர்களை சந்தித்து எந்தெந்த இடங்களுக்கு, அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார் என்பது குறித்தும், பாதயாத்திரையின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளோம்.

மேலும் அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள், கமிஷனர்களிடம் எந்த சாலை வழியாக, எந்த பகுதி வழியாக அண்ணாமலை செல்கிறார் என்பது குறித்து மாவட்ட எஸ்பிக்கள், கமிஷனர்களிடம் விரைவில் தர இருக்கிறோம். அண்ணாமலையின் பாதயாத்திரை என்பது தமிழர்களுடைய எழுச்சிக்காகவும், விழிப்புணர்வுக்காகவும், ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும் மேற்கொள்ள இருக்கிறார்.

இதற்கு ஏராளமான இளைஞர்கள் வரவேற்பு அளித்திருக்கிறார்கள். எந்த கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் இளைஞர்களிடையே அண்ணாமலைக்கு புதிய வரவேற்பு இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். பாதயாத்திரை தொடக்க விழாவில் ஒரு லட்சம் பேரும் பாதயாத்திரையின் போது அண்ணாமலையுடன் சுமார் 5,000 பேரும் கலந்து கொள்ள உள்ளனர்.

மக்களுடைய வளத்திற்காகவும், மண்ணினுடைய வளத்திற்காகவும் கால்நடையாக சிறு தூரமும் தொலைதூரத்திற்கு காரிலும் மூன்று பிரிவுகளாக இடைவெளி விட்டு பயணம் செய்ய அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை என் மண் என் மக்கள் என்பதை நோக்கமாகக் கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும், தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ வேண்டும் எனவும் மண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு சிறப்பாக இந்த பாதயாத்திரை நடைபெற உள்ளது.

ராமேஸ்வரம் தமிழ்நாட்டின் கடைக்கோடி, அங்கிருந்து தலைநகரில் பாதயாத்திரை முடியவிருக்கிறது. 2024ஆம் ஆண்டு தேர்தலில் இந்த பாதயாத்திரை பலம் கொடுக்கும் எனவும், இதன் பலன் தேர்தலிலே அறுவடை செய்யப்படும். அந்தந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் அண்ணாமலையுடன் பாதயாத்திரையின் போது பயணிப்பார்கள்” என்றார்.

ஆளுநர் குறித்த கேள்விக்கு, “யாருக்கும் சாதகமாக இருந்து செயல்பட வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை. ஆளும் தரப்பினரை சில கேள்விகள் கேட்கின்றார். சட்டப்படி அவர்கள் அனுப்புகிற கோரிக்கைகளுக்கு பதில் கேட்டு திரும்ப அனுப்புகிறார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாயிலேயே வடை சுடுவதில் வல்லவர் பிரதமர்: லியோனி பேச்சால் சலசலப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.