ETV Bharat / state

சென்னை- தூத்துக்குடி- சென்னை விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 10:29 AM IST

விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது
விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது

Flight services to thoothukudi has resumed: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை: கனமழையால் சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் சேவைகள் தொடங்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிச.17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்து ஊரே வெள்ளக்காடாக மாறியது.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பொழிந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவியது. இதன் காரணமாக, அங்குள்ள மக்களுக்கு படகுகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் வெள்ளத்தால் அப்பகுதிகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த இந்த மழையால், பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்ற இரண்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல், மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கின. இதையடுத்து, அன்று மாலை தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களில் மத்தியக் குழுவினர் நாளை (டிச.20) ஆய்வு..!

திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளிலும் மழைப்பொழிவு அதிகமாக இருந்ததால், சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமான சேவைகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. இதனால் தென் மாவட்டங்களுக்கு அவசரமாகச் செல்ல வேண்டியவர்கள், சென்னையில் இருந்து மதுரை அல்லது சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் பயணித்தனர்.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கி இருக்கிறது. இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமான சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் முதல் விமானம், இன்று காலை 5.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

அதேபோல், தூத்துக்குடியில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் பயணிகள் விமானம், காலை 9.20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தது. இதைத் தொடர்ந்து, இன்று காலை 10.15 மணி, பகல் 2.10 மணி விமானங்களும் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓய்ந்த கனமழை.. நெல்லையில் ரயில் சேவை சீரானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.