ETV Bharat / state

சென்னையில் 4 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. பசியால் பரிதவித்த பயணிகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 7:31 AM IST

Air India flight grounded in Chennai for 4 hours
சென்னையில் 4 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

Air India flight grounded in Chennai for 4 hours: மும்பையில் இருந்து சென்னை வழியாக மதுரை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் 4 மணி நேரம் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து பசியில் பரிதவித்த பயணிகள் போராட்டம் நடத்தினர்.

சென்னை: ஏர் இந்தியா பயணிகள் விமானம் தினமும் மும்பையில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேரும். அதன் பின்பு சென்னையில் இருந்து மதுரை செல்ல இருக்கும் பயணிகளை ஏற்றிக்கொண்டு, காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டுச் செல்லும்.

அந்த வகையில் நேற்று (செப் 02) இந்த விமானம் 5 நிமிடம் முன்னதாகவே காலை 10:55 மணிக்கே மும்பையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்து விட்டது. இந்த விமானத்தில் மும்பையில் இருந்து நேரடியாக மதுரை செல்வதற்கு 42 பயணிகளும், சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு 76 பயணிகளும் என மொத்தம் 118 பயணிகள், மதுரை செல்ல காத்திருந்தனர்.

இந்த நிலையில் வழக்கம் போல காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டுச் செல்ல தயாரானபோது, எதிர்பாராவிதமாக திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. எனவே, விமானம் தாமதமாக பிற்பகல் 1:30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் பிற்பகல் இரண்டு மணி ஆகியும் விமானம் பழுது பார்க்கும் பணி முடிவடையவில்லை.

இதை அடுத்து நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகளில், குழந்தைகளும், முதியோர்களும் பசி தாங்க முடியாமல் ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், போலீசாரும் விமான பயணிகளை சமாதானம் செய்தனர்.

அதோடு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர வைக்கப்பட்டனர். விமானம் மாலை 3 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 3 மணிக்கும் விமானம் புறப்படவில்லை. இதையடுத்து விமானத்துக்குள் இருந்த பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

அப்போது "எங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்து, அனைவரையும் விமானத்தை விட்டு கீழே இறக்கிவிடுங்கள். நாங்கள் வேறு விமானம் மூலமாகவோ அல்லது சாலை வழியாகவோ மதுரை சென்று விடுவோம்" என்று பயணிகள் கூச்சல் போட்டனர். தொடர்ந்து பயணிகள் மீண்டும் சமாதானம் செய்து அமர வைக்கப்பட்டனர்.

ஏர் இந்தியா விமானம் சுமார் 4 மணி நேரம் தாமதமாக, நேற்று (செப் 02) மாலை 3:30 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவையை நீட்டித்த தெற்கு ரயில்வே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.