ETV Bharat / state

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்க்கை!

author img

By

Published : Aug 2, 2023, 10:01 AM IST

Updated : Aug 4, 2023, 12:31 PM IST

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 224  மாணவர்கள் சேர்க்கை!
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்க்கை!

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 11 ஆயிரத்து 300 இளநிலைப் பட்டப்படிப்புகளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை சேர்ந்து உள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் முறையாக மாணவர் சேர்க்கை கல்லூரி கல்வி இயக்குநர் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதனால் நடப்பாண்டில் கூடுதலாக தேவைப்படும் கல்லூரிகளுக்கு 20% மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.

45 ஆயிரத்து 965 மாணவர்களும் 56 ஆயிரத்து 259 மாணவிகளும் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதேபோல் அரசு பள்ளியில் படித்த 27 ஆயிரத்து 775 மாணவர்கள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெறவும் உள்ளனர்.

நடப்பாண்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி நேரடி வகுப்புகள் துவக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 8 ஆம் தேதி முதல் மே மாதம் 22 ஆம் தேதி வரையில் பதிவு செய்தனர். மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது.

163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. அந்தக் கலந்தாய்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். முதல்முறையாக அரசுக் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வுச் செய்தப் பின்னர் வேறுக் கல்லூரியில் சேர்வதை தவிர்க்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் கல்லூரிக் கல்வி இயக்குநரின் இணையதளத்தில் இருந்து அனுமதிக் கடிதம் பெற்றப் பின்னர் தான் சேர்க்கை நடத்தப்பட்டது.

இந்தக் கலந்தாய்வின் மூலம் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்து 34 மாணவர்கள், 25 ஆயிரத்து 253 மாணவிகள். இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 10 ஆயிரத்து 918 பேர் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஜூன் 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து உள்ளனர். அவர்களில் 31 ஆயிரத்து 621 மாணவர்கள், 44 ஆயிரத்து 190 மாணவிகள். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேராமல் காலியாக உள்ள இடங்களுக்கு கல்லூரியின் தரவரிசை அடிப்படையில் இனவாரி ஒதுக்கீட்டின் படி மாணவர்கள் அழைக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது.

ஜூன் 30 ஆம் தேதி வரை 84 ஆயிரத்து 899 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 36 ஆயிரத்து 626 பேர் மாணவர்கள்,
48, 273 பேர் மாணவிகளும் ஆவார்கள். ‌இதில் அரசுப் பள்ளிகளில் படித்த 23 ஆயிரத்து 295 மாணவிகளும் உள்ளனர். மேலும் குறிப்பிட்ட கல்லூரிகளில் அதிக அளவில் மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் என்று உயர் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில் கல்லூரியில் காலியாக உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடியாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு உயர் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் ஜூலை 4 ஆம் தேதி 7ஆம் தேதி வரையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ள தகவலில், “தமிழ்நாட்டில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்ந்த பின்னர் தேவைப்படும் கல்லூரிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் இடம் வழங்கியது உட்பட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 300 மாணவர்கள் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 224 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 49 ஆயிரத்து 965 மாணவர்களும், 56 ஆயிரத்து 259 மாணவிகளும் அடங்குவர். அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளின் புதுமைப்பெண் திட்டத்தில் நிதி உதவி பெறுவதற்கு தகுதி பெற்ற 27 ஆயிரத்து 775 மாணவிகளும் சேர்க்கப்பட்டு உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 9 ஆயிரத்து 76 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படாமல் உள்ளனர். கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிக அளவில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கைத்தறி பட்டு ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் காந்தி

Last Updated :Aug 4, 2023, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.