ஹாக்கி விளையாட்டை பற்றி தெரியவில்லை என்றாலும், தயான் சந்த் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏனெனில், ஹாக்கி விளையாட்டில் ஜாம்பவான் வீரரான இவர், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே நம் நாட்டின் பெருமையை கடல் தாண்டி தேடித்தந்தார். ஹாக்கி விளையாட்டின் மாயாஜலாக்காரர் என்றும் இவருக்கு பெயர் உண்டு.
தனது சிறப்பான ஆட்டத்தால் ஒட்டுமொத்த எதிரணியையும் ரசிகராக்கும் திறன் இவருக்கு இருக்கிறது. 1905 ஆகஸ்ட் 29ஆம் தேதி அலஹபாத்தில் பிறந்த இவர், 16 வயதில் இந்தியாவின் பிரிட்டிஷ் ராணுவத் துறையில் சேர்ந்தார். பின்னர், 1928, 1932, 1936 என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத்தந்தார்.
குறிப்பாக, 1936 பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஜெர்மனியின் சர்வதிகாரி ஹிட்லர் இவரது ஆட்டத்தைக் கண்டு மெய்சிலிர்த்துள்ளார். அதுமட்டுமின்றி, ஜெர்மனிக்காக ஹாக்கி விளையாடினால், ராணுவ துறையில் உயரிய பதிவு அளிப்பதாகவும், தயான் சந்திடம் ஹிட்லர் கேட்டுள்ளார். ஆனால், ஹிட்லரின் இந்த ஆஃபரை தயான் சந்த் மறுத்துள்ளார்.
பலமுறை எதிரணிகள் இவரது ஹாக்கி பேட்டை உடைத்து அதில் ஏதேனும் காந்தகம் இருக்கிறதா என்றும் சோதனை செய்துள்ளனர். ஏனெனில், பந்து இவரது பேட்டுக்கு வந்தால் அது கோலாகத்தான் மாறும். இதுவரை 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். இவரை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு 1956இல் இவருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கியது.
இதையடுத்து, இவரது பிறந்தநாளை தேசிய விளையாட்டுத் தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு 2012இல் அறிவித்தது. இந்நிலையில், இவரது 115ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால்தான் ஒவ்வொரு ஆகஸ்ட் 29ஆம் தேதியும் தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடுகிறோம்.
அதேசமயம், விளையாட்டு வீரர்களுக்கு உரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது, பயிற்சியாளருக்கான துரோனாச்சார்யா போன்ற விருதுகள் இந்தநாளில்தான் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகின்றன.