ETV Bharat / sports

கூச் பெஹார் டிராபியின் இறுதி போட்டியில் 404 ரன்கள் எடுத்து புதிய சாதனையை படைத்த பிரகார் சதுர்வேதி..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 6:24 PM IST

prakhar-chaturvedi-becomes-first-player-to-score-400-runs-in-cooch-behar-trophy-final
கூச் பெஹார் டிராபியின் இறுதி போட்டியில் 404 ரன்கள் எடுத்த வீரர்.. புதிய சாதனையை படைத்த பிரகார் சதுர்வேதி!

Cooch Behar trophy final: கூச் பெஹார் டிராபி 2023-24 சீசனின் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியின் தொடக்க வீரர் பிரகார் சதுர்வேதி 638 பந்துகளில் 404 ரன்கள் எடுத்ததன் மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

சிமோகா: பிசிசியின் 19 வயதுக்குப்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபி 2023-24 சீசன் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இத்தொடரில் கர்நாடகா அணி தமிழ்நாட்டை வீழ்த்தியும், மும்பை அணி உத்திர பிரதேசத்தை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த இறுதிப் போட்டியானது கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஜன.12ஆம் தேதி சிமோகாவின் கேஎஸ்சிஏ நாவுலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கர்நாடகா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய மும்பை அணி 113.5 ஓவர்களில் 380 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரரான ஆயுஷ் மத்ரே 180 பந்துகளில் 145 ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடகா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 223 ஓவர்களை சந்தித்த கர்நாடகா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 890 ரன்கள் குவித்தது. போட்டியின் நாட்கள் முடிவடைந்ததால், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற கர்நாடகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கர்நாடகா அணி 2023-24 19 வயதுக்குப்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபியை வென்றது.

இதில் தொடக்க வீரரான பிரகார் சதுர்வேதி 638 பந்துகள் சந்தித்து 46 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 404 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதன் மூலம் கூச் பெஹர் டிராபியின் இறுதிப் போட்டியில் 400 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நேற்றைய நாளின் முடிவில் பிரகார் சதுர்வேதி 256 ரன்கள் எடுத்த நிலையில், இன்று (ஜன.15) இந்த அபார சாதனையைப் படைத்துள்ளார். இவருடன் நல்ல பார்ட்னர் ஷிப்பை அமைத்த ஹர்ஷில் தர்மனி 228 பந்துகளில் 169 ரன்கள் குவித்து ஆகாஷ் பாவர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதேபோல், இந்த ஆட்டத்தில் கார்த்திக்கேயா 72 ரன்களும், ஹர்டிக் ராஜ் 51 ரன்களும் எடுத்தனர். மேலும், இந்தியத் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் இந்த பிளேயிங் 11-ல் இடம் பெற்றிருந்தார். ஆனால் அவரால் பெரிதாக எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அவர் இப்போட்டியில் 46 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதையும் படிங்க: சச்சினையும் விட்டு வைக்காத டீப் பேக் வீடியோ! - சச்சின் கொடுத்த விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.