ETV Bharat / sports

India Vs New Zealand: "எந்த அணியும் யாரையும் வெல்ல முடியும்" - கேன் வில்லியம்சன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 6:45 PM IST

Kane Williamson
Kane Williamson

World Cup Cricket 2023 : அரைஇறுதி ஆட்டம் என்பது லீக் சுற்றின் தொடர்ச்சி இல்லை என்றும் புதிதாக நாக் அவுட் தொடங்கப்படுகிறது என்பதால் எந்த அணியும் யாரையும் வீழ்த்த முடியும் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து வெற்றி வாகை சூட காத்திருக்கிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதி போட்டி நாளை (நவ. 15) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "அரைஇறுதி ஆட்டம் கடுமையான சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும். இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் இறுதிப் போட்டிக்கான நேரம் வருவதை அறிந்து நாங்கள் விளையாடுவோம். அரைஇறுதி என்பது லீக் ஆட்டங்களின் தொடர்ச்சி இல்லை. எல்லாமே மீண்டும் முதலில் இருந்து தொடங்கும், அது அன்றையை நாளை பொருத்தது.

இந்தியா சிறந்த அணி என்றாலும், சிறந்த கிரிக்கெட் விளையாடும் அணிகளில் விதிவிலக்காக உள்ளது. ஆனால் போட்டி நடைபெறும் நாளில் எங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடும்போது, அது நிச்சயமாக சிறந்த வாய்ப்பை அளிக்கும். இறுதிப் போட்டிக்கு வரும் போது எதுவும் நடக்கலாம்.

இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு ஆட்டமும் ஒரு யுக்தியை கொண்டு தான் உள்ளது. இரு தரப்பிலும் தரமான அல்லது நிலைமையை மாற்றி அமைக்கும் விளையாட்டை கொண்டு வரும் பட்சத்தில் எந்த அணியும் யாரையும் வெல்ல முடியும். இறுதிக் கட்டத்தை அடைந்து, புதிய அணுகுமுறையை எடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஏனெனில் அது மீண்டும் தொடங்கும்.

போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது என்பது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக 6 பந்துவீச்சாளர்களை கொண்ட அணியை இந்திய அணி முன்னிறுத்துவது அவர்களின் தனிப்பட்ட யுக்தி.

போட்டியை நடத்தும் இந்தியாவை சொந்த மண்ணில் எதிர்கொள்ள அனைவரும் தயாராக உள்ளோம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். எதிர்காலத்தை தீர்மானிப்பது என்பது கடினமான ஒன்று, சிறப்பாக கூட்டு முயற்சியுடன் செய்லபடும் அணி வெற்றி வாகை சூடும் என்பதில் சந்தேகமில்லை" என்று கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : India Vs New Zealand: மீண்டும் திரும்புகிறதா 2019 உலக கோப்பை? இந்தியா - நியூசிலாந்து வெற்றி வாய்ப்பு எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.