ETV Bharat / sports

டோனிக்கு ஜடேஜாவின் நினைவுப் பரிசு - எல்லாமே வீணா போச்சு!

author img

By

Published : Apr 13, 2023, 12:46 PM IST

Dhoni - Jadeja
Dhoni - Jadeja

சென்னை அணியின் கேப்டனாக டோனியின் 200வது ஆட்டத்தில் வெற்றி பெற முடியாமல் போனது வருத்தத்தை அளிப்பதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்து உள்ளார்.

சென்னை : டோனியின் 200 வது ஆட்டத்தில் வெற்றி பெற்று அவருக்கு மறக்க முடியாத நினைவை கொடுக்க முடியாமல் போனது வேதனை அளிப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா தெரிவித்து உள்ளார். ஏப்ரல் 12 ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது லீக் ஆட்டம் சென்னை மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. சென்னை அணியின் கேப்டனாக டோனிக்கு இது 200வது ஆட்டமாகும். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 237 ஆட்டங்களில் டோனி விளையாடி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ஆட்டத்தில் விளையாடிய வீரர் என்ற சிறப்பையும் டோனி தன் வசமாக வைத்து உள்ளார்.

டோனி இதுவரை 213 ஐபிஎல் ஆட்டங்களுக்கு கேப்டனாக பதவி வகித்து உள்ளார். 2016 ஆம் ஆண்டு சென்னை அணி இரண்டு ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு டோனி கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனாக தல டோனி களமிறங்கும் 200வது ஆட்டம் சொந்த ஊரான சென்னையில் நடைபெற்றது.

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 52 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டன. ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் கேப்டன் டோனி ஆகியோர் களத்தில் இருந்தனர்.

19வது ஓவரில் இருவரும் சேர்ந்து 19 ரன்கள் சேகரித்தனர். இதனால் ஆட்டத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை அணி ரசிகர்கள் உற்சாக மகிழ்ச்சியில் திளைத்தனர். இறுதி ஓவரை ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா வீசினார்.

கடைசி ஓவரின் 2வது மற்றும் 3வது பந்தை டோனிக்கு சிக்சருக்கு பறக்க விட்டார். ஏறத்தாழ வெற்றி களிப்பில் சென்னை அணி ரசிகர்கள் ஈடுபடத் தொடங்கினர். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டோனி - ஜடேஜா கூட்டணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் களத்தில் டோனி இருந்தும் சென்னை அணி வெற்றி பெற முடியாமல் போனது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெருத்த சோகமாக மாறியது. அதேநேரம் 200வது ஆட்டத்தில் கேப்டனாக களமிறங்கும் டோனிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று சமர்பிக்க காத்திருந்த வீரர்களும் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு அதை டோனிக்கு சமர்பிக்க முடியாமல் போனது வேதனை அளிப்பதாக சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : CSK Vs RR: மஞ்சள் படையை வீழ்த்திய பிங்க் படை.. தோனியின் சாதனை முறியடிப்பு.. சிஎஸ்கே வீரர்கள் ஏமாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.