ETV Bharat / sitara

விஜய்யின் சொகுசு கார் இறக்குமதி வழக்கு தள்ளிவைப்பு!

author img

By

Published : Feb 1, 2022, 8:16 PM IST

விஜய்யின் சொகுசு கார் இறக்குமதி வழக்கு தள்ளிவைப்பு!
விஜய்யின் சொகுசு கார் இறக்குமதி வழக்கு தள்ளிவைப்பு!

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதித்ததால் 400 விழுக்காடு அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 சீரிஸ் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழ்நாடு வணிக வரித்துறை உத்தரவிட்டது.

பின்னர் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என 2018ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர் விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. இருப்பினும் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதத்தைக் கணக்கிட்டு வணிக வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி தாமதித்த காலத்திற்கு 400 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் அபராதமாக செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது? எனும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டார். அதுவரையில் அபராதத்தொகை செலுத்தல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாமென அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (பிப்.1) நீதிபதி சரவணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தோனி - விக்ரம் சந்திப்பு; பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.