ETV Bharat / international

இந்தியா-மாலத்தீவு விவகாரம்; மாலத்தீவு அதிபர் முய்சு சீன பயணம்.. பின்னணி என்ன?

author img

By PTI

Published : Jan 8, 2024, 4:32 PM IST

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீன பயணம்
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீன பயணம்

Mohamed Muizzu China visits: இந்தியா மாலத்தீவு இடையே நிலவும் பரப்பான அரசியல் சூழலில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசுமுறை பயணமாக 5 நாட்கள் சீன சென்றுள்ளார். இருநாடு உறவு குறித்து, ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

பெய்ஜிங் (சீனா): மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஐந்து நாள் சுற்றுப்பயணமாகச் சீனா சென்றுள்ளார். தனது மனைவி சாஜிதா முகமது மற்றும் மாலத்தீவு நாட்டு உயர் அதிகாரிகளுடன் சென்றுள்ளார். அங்கு இவரது சுற்றுப்பயணத்தின் போது, சீன அதிபர் சை-ஜின்பிங்கை சந்திக்க உள்ளார். மேலும், இருவரின் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் விதத்தில் சில ஒப்பந்தங்களில் கையொப்பம் இட உள்ளனர்.

மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பதிவு செய்ததையடுத்து, அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாலத்தீவு அதிபர் முதல் முறையாகச் சீன சுற்றுப்பயணம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அண்மையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி இருந்தார். அப்போது, "இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பின் மூலம் சீனா - மாலத்தீவு இடையே ஒரு வரலாற்றுத் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்பட்டு புதிய உச்சத்தை அடைவதற்கான வழிகாட்டல்களை, இரு நாட்டுத் தலைவர்களும் வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாலத்தீவு அதிபரின் சீன சுற்றுப்பயணம் குறித்து அந்நாட்டு அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், இரு நாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்பம் மற்றும் மற்ற துறைகளில் மேம்பாடுகளுக்கு இந்த பயணம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும், தென்கிழக்கு சீனாவில் உள்ள ஃபுஜோவில் (Fuzhou) நடைபெறும் இன்வெஸ்ட் மாலத்தீவு மன்றத்திலும் (Invest Maldives Forum) மாலத்தீவு அதிபர் முய்சு கலந்து கொண்டு, இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார மேம்பாடு குறித்து, அந்நாட்டுத் தொழில் வல்லுநர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

முய்சுக்கு முன்னர் மாலத்தீவின் அதிபராக இருந்தவர்கள், முதலில் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். ஆனால், கடந்த நவம்பர் மாதம் மாலத்தீவு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முய்சு தனது முதல் சுற்றுப்பயணமாகத் துருக்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தனது துருக்கி பயணத்திற்கு முன்பாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அவர்களது சந்திப்பில் இருநாட்டு நல்லுறவு குறித்துக் கலந்துரையாடியதாகக் கூறப்பட்டது. மேலும், மாலத்தீவிலிருந்து 77 இந்திய ராணுவத்தினர்களைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், மாலத்தீவில் சீன அரசின் பீ.ஆர்.ஐ (China's Belt and Road Initiative) கீழ் நடத்தும் மேம்பாட்டுப் பணிகளைக் குறித்தும் எந்த வித அறிவிப்புகளும் வெளியிடாமல் இருந்து வருகிறது. அண்மையில், சீனாவில் நடைபெற்ற சீனா-இந்தியப் பெருங்கடல் பிராந்திய வளர்ச்சி ஒத்துழைப்புக்கான மன்றத்தில் பங்கேற்ற அந்நாட்டுத் துணை அதிபரும் அது குறித்து எந்த தகவலும் குறிப்பிடவில்லை.

சீன நாட்டின் BRI என்பது, வர்த்தகத்தை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், நிலம் மற்றும் கடல் வழியாகச் சீனாவை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கும் புதிய வர்த்தக வழிகளை உருவாக்க, 2013ஆம் ஆண்டு சீன அதிபர் சை-ஜின்பிங்கால் தொடங்கப்பட்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி குறித்து அவதூறு: 3 மாலத்தீவு அமைச்சர்கள் இடைநீக்கம்.. முழு பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.