சென்னை: கே.பி மற்றும் கிரீன் புரொடக்சன்ஸ் - ஆர்.பி பாலா தயாரிப்பில், முரளிதரன் இயக்கத்தில் யோகிபாபு மற்றும் வனிதா விஜயகுமார் நடித்துள்ள திரைப்படம் "தில்லு இருந்தா போராடு". இப்படத்தில் கார்த்திக் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இப்போது நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன், அதனால் நேரமில்லை.
எனக்கு இந்த கதை மிகவும் பிடித்தது. நாம் வளரும் காலக்கட்டத்தில் அப்போது லேடி சூப்பர் ஸ்டார் என்றால், விஜயசாந்தி. இப்போது நயன்தாரா. அந்த ஸ்டைலில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசை. அதனால் அந்த ஸ்டைலில் படம் பண்ணுகிறேன். நான் அடுத்து நடிக்கும் 'வைஜயந்தி ஐபிஎஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் சேர்ந்து வெளியிட்டார்.
இது ஸ்பெஷலான தருணம். மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அக்டோபர் 4 பவர் ஸ்டார் சீனிவாசன் பிறந்தநாள். இன்று ( அக்டோபர் 5 ) எனக்கு பிறந்தநாள். இருவருக்கும் ஒரு நாள்தான் வித்தியாசம்” என்று சொல்லி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய வனிதா விஜயகுமார், “மிகவும் பெருமையாக இருக்கிறது. எதிர்பாராத பல விஷயங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக அடுத்தடுத்து நடக்கிறது. தோல்வி என்பது ஒரு காலக்கட்டத்தில் இருக்கும். விட்டுக்கொடுப்பது என்பது என் வாழ்க்கையிலும் ஒரு காலத்தில் வந்தது. ஆனால், அதைத் தாண்டி ஒரு பாதை, வழி இருக்கிறது. இப்படியாக நிறைய போராடி பல தோல்விகளைச் சந்தித்து இருக்கிறேன்.
அதைக் கடந்து வெற்றியை பெற்றிருக்கிறேன். இன்றைக்கு நடக்கும் எல்லாமே அதிசயமாக நடக்கிறது. கனவுகள் நினைவாகும், கடவுள் நமக்கு ஆசிர்வதிப்பார். நிச்சயமாக வெற்றி கிடைக்கும். அதற்காக நாம் உழைக்க வேண்டும். மற்றவர்களுக்கு உழைக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், “எத்தனை படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் பண்ண முடிகிறது? பாதி படங்கள் ஓடிடியில்தான் வருகிறது. அதையெல்லாம் தாண்டி தியேட்டர்களில் ரிலீஸ் செய்தால் அதுவே வெற்றி.
எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்பதுதான் வாழ்க்கை. என் வாழ்க்கையிலும் அப்படி இருந்தது. பல தயாரிப்பாளர்கள் படங்கள் எடுத்தாலும் கதை, எடுக்கும் விதம்தான் மிகவும் முக்கியம். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. நம்மால் ரசிகர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாது” என்றார்.
தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் மகள் பேச மாட்டிங்கிறாரே என்பது குறித்த கேள்விக்கு, “கமல் சார் கூட இதைத்தான் சொன்னார். ஒவ்வொருவருக்கும் தனித்துவம் ஒன்று இருக்கிறது. அதை யாரும் மாற்ற முடியாது. அடுத்ததாக அவள் படம் நடிக்கும்போது நான் ஆலோசனை சொல்வேன். அவளுக்கு ரியாலிட்டி நிறைய இருக்கிறது என்று தெரியும். அதனால்தான் பிக் பாஸ்க்கு அனுப்பினேன்.
அவள் ரொம்ப வித்தியாசமானவள். அதை போக போக நீங்களே பார்ப்பீர்கள்” என்றார். இதனையடுத்து, இந்த பிக் பாஸ் 7-இல் அனைவரும் புதிய முகங்களாக இருக்கிறார்களே என்ற கேள்விக்கு, “பிக் பாஸில் இந்த சீசனில் யுகேந்திரன் (மலேசியா வாசுதேவன் பையன்), நடிகை விசித்ரா மற்றும் சின்னத்திரை நடிகைகள் என நிறைய பிரபலங்கள் இருக்கிறார்கள்” என்றார்.
பிக் பாஸ் பற்றி எப்போதும் உங்கள் ரிவ்யூ மிகவும் காரசாரமாக இருக்கும். இந்த முறை உங்கள் மகள் உள்ளே இருப்பதால், எப்படி? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக நான் நியாயமான ரிவ்யூதான் கொடுப்பேன். அனைவருக்கும் நியாயமான ரிவ்யூதான் கொடுக்கிறேன். தவறு என்றால் தவறு என்றுதான் சொல்லுவேன். என் மகள் தவறு செய்தால், அதை தவறு என்று சொல்லுவேன். ஆனால் தவறு செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
பிக் பாஸில் ஒருவருடைய ஆடையை பற்றி நடிகை விசித்ரா தவறாக பேசியது குறித்து பதிலளித்த அவர், இதில் யாரையும் பொதுவாக குறை சொல்ல முடியாது. இந்த சீசனில் அழுத்தம் அதிகமாக இருக்கிறது. நாங்கள் இருந்த பிக் பாஸில் அழுத்தம் குறைவு. வயது அதிகமானால் சீக்கிரம் அனுப்புகிறார்கள். அதனால் எதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் சொல்லி இருக்கலாம். விசித்ரா ஆடையை பற்றி அப்படி சொல்லி இருக்க கூடாது. ஏன் சொன்னார் என்று தெரியவில்லை என தெரிவித்தார்.