ETV Bharat / entertainment

"பெரிய நடிகர்கள் படம் மட்டுமே வெற்றி பெறும் என்பதை மாற்றுவோம்" - கவிஞர் வைரமுத்து!

author img

By

Published : Aug 19, 2023, 2:18 PM IST

Vairamuthu
கவிஞர் வைரமுத்து

ஜென்டில்மேன் 2ஆம் பாகம் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

சென்னை: பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இப்படத்தின் மூலம் தான் இயக்குனர் ஷங்கர் அறிமுகமானார். அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர் குஞ்சுமோன் தற்போது தயாரித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். அதற்கான தொடக்க விழா இன்று (ஆக.19) சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் கீரவாணி இசை அமைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் குஞ்சுமோன், கே.ராஜன், அபிராமி ராமநாதன், தியாகராஜன், எஸ்.ஆர் பிரபு, ரவி கொட்டாரக்காரா நடிகர்கள் சுமன், காளி வெங்கட், சென்ட்ராயன், சேத்தன், அஜய் வின்சென்ட், படவா கோபி, ஜார்ஜ் விஜய், பிரேம் குமார், முனீஸ் ராஜா, நடிகைகள் சித்தாரா, குட்டி பத்மினி, விஜி சந்திரசேகர், சத்யபிரியா, சுதா ராணி, ஸ்ரீ ரஞ்சினி, பிரியா லால், ஆர்த்தி கணேஷ் மற்றும் இயக்குனர் கோகுல் கிருஷ்ணா, தோட்டாதரணி, பாடலாசிரியர் வைரமுத்து, லைகா தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேடையில் பேசிய நடிகர் சுமன், "நான்‌ கார்கில் சமயத்தில் ராணுவத்திற்கு எனது 150 ஏக்கர் நிலத்தை கொடுத்ததற்கு பாராட்டுகிறார்கள். இதற்கு எனது மனைவிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இன்றும் காஷ்மீரில் நிலை மோசமாக உள்ளது. அந்த இடத்தில் ஸ்டூடியோ அல்லது ஆயுர்வேதா மருத்துவம் கட்ட வாங்கினேன். அதன்பிறகு தான் நம்ம நாட்டிற்காக கொடுத்தேன். நாம் அவர்களை பற்றி யோசிக்கிறோம் என்று நினைக்கிறார்கள். அனைத்து மொழிக்காரர்களையும் முதலில் ஒன்றிணைப்பது சினிமாதான்" எனத் தெரிவித்தார்.

கவிஞர் வைரமுத்து கூறியதாவது, "நிறைய பேச‌ வேண்டிய மேடைதான். குஞ்சுமோன் ஒரு திரைப்படம் எடுக்க எதை மூலதனமாக வைத்திருக்கிறார் என்று ஆராய்ந்தேன். அது பொன், பொருள், பணம் அல்ல இவை எல்லாம் காணாமல் போய் விடும். அவரது மூலதனம் துணிச்சல். துணிச்சல் என்ற மூலதனத்தை 33 ஆண்டுகளாக வைத்துக்கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறார்.

இவருக்கு நேர்ந்த துன்பங்கள் வேறு ஒருவருக்கு வந்திருந்தால் துறவி ஆகியிருப்பார். இல்லை என்றால் அரசியல்வாதி ஆகியிருப்பார். இவர் துணிச்சலுடன் மீண்டும் வந்துள்ளார். இந்த தலைமுறையை 2 மடங்கு வெற்றிபெற மீண்டு(ம்) வந்துள்ளார். வென்றாலும், தோற்றாலும் நானே உச்சம் என்ற உறுதி கொண்டவர் குஞ்சுமோன். இவரை பற்றி பேச தனி அரங்கம் வேண்டும்.

எனது மொத்த தமிழையும் உங்களது வெற்றிக்கு செலவழிப்பேன். பாலச்சந்தர் கேட்டபோது, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சொன்ன பெயர் கீரவாணி. பாலச்சந்தர் மரகதமணி என்று பெயரிட்டு என்னிடம் ஒப்படைத்தார். அவரிடம் அதே பண்பு, அதே கணிவு இருக்கிறது. இவரும் ஒரு ஜென்டில்மேன். விருதுகள் ஒன்றும் எனக்குள் மாற்றத்தை தந்துவிடவில்லை. நான் நாளைய சாப்பாட்டுக்கு இன்று உழைக்க வேண்டும்.

உழைப்பை உறுதி செய்யும் ஏற்பாடுகள் தான் விருது. நின்ற‌ இடத்தில் நிற்க வேண்டுமா... ஓடிக்கொண்டே இரு என்பதே எனது கருத்து. அப்படிப்பட்டவர் தான் கீரவாணி, அவருக்கு பாராட்டுக்கள். இப்படத்தில் 3 பாடல்கள் முடிந்துவிட்டன. அடுத்த மாதம் அடுத்த 3 பாடல்களும் முடிந்து விடும் என்று உத்திரவாதம் தருகிறேன். புவி வெப்பமடைதல் பற்றி ஐ.நா அழுகிறது.

இதுகுறித்து இப்படத்தில் ஒரு பாடலை எழுத நினைத்தேன்.‌ இதனை இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் ஆகியோரும் ஒப்புக் கொண்டனர். இயக்குனர் கோகுல் கிருஷ்ணா மிகவும் அறிவுள்ளவர், நிச்சயம் வெற்றி பெறுவார். தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவோம். பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே வெற்றி பெறும் என்பதை உடைத்து சிறிய படங்களும் வெற்றி பெறும் என்பதை உணர்த்துவோம் நன்றி" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Jailer box office: விரைவில் ரூ.500 கோடியை நெருங்கும் ஜெயிலர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.