ETV Bharat / crime

நிலப்பிரச்சினை காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்

author img

By

Published : Jun 21, 2021, 7:07 PM IST

நிலப்பிரச்சினை காரணமாக ஒருவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி
நிலப்பிரச்சினை காரணமாக ஒருவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர்: தன் மீது பொய் புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைக் கண்டித்து பாதிக்கப்பட்ட நபர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழமலை. இவரது தாத்தாவிற்கு அரசு கொடுத்த நிலத்தினை இவரது தந்தை நடராஜன் பராமரித்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது தந்தையின் தங்கையான, ராஜேஸ்வரி என்பவர் இந்த நிலத்தை வேறொருவருக்கு, நடராஜன் பாகத்தையும் சேர்த்து விற்பனை செய்துவிட்டார்.

பொய் புகார்

இதையடுத்து, ராஜேஸ்வரி ‘பழமலையும், அவரது வழக்குரைஞரும் வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்து, என் வீட்டிலிருந்து 2.30 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்’ என பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள பழமலை, பெரம்பலூர் அரசு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி புகார் கொடுத்த ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்த வேண்டும்’என்றும் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தீக்குளிக்க முயற்சி

ஆனால் இது குறித்து விசாரிக்காமல் காவல் துறையினர் காலதாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பழமலை தங்களது பங்கினையும் சேர்த்து விற்பனை செய்ததோடு, தங்கள் மீது பொய் புகார் கொடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரை கண்டித்தும், தங்கள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியும் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணை எடுத்துவந்து திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

தொடர்ந்து, அங்கிருந்த பாதுகாப்புக் காவலர்கள் விரைந்து சென்று அவரைத் தடுத்து நிறுத்தி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தினால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.