ETV Bharat / city

மறுவாழ்வு வேண்டி பெண் மாவோயிஸ்ட் தமிழ்நாடு காவல் துறையினரிடம் சரண்!

author img

By

Published : Dec 19, 2021, 10:54 PM IST

பெண் மாவோயிஸ்ட்
பெண் மாவோயிஸ்ட்

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபா (எ) சந்தியா கியூ பிரிவு காவல் துறையினர் மூலமாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சரணடைந்தார்.

திருப்பத்தூர்: கர்நாடகா மாநிலம், சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபா (எ) சந்தியா. இவர் தடை செய்யப்பட்ட இயக்கமான சிபிஐயின் (மாவோயிஸ்ட்) மாநிலக் குழு உறுப்பினராக இருந்து வெளிவந்துள்ளார்.

அதன்பின் அமைதியான வாழ்வை சமுதாயத்துடன் வாழ விரும்புவதாகவும், இதனால் தமிழ்நாடு காவல் துறை முன்பு சரணடைய நேற்று(டிச.18) கியூ பிரிவு காவல் துறையினரின் மூலமாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன்பு ஆஜர் செய்யப்பட்டு சரணடைந்தார்.

இந்நிலையில் மாவோயிஸ்ட் பிரபா 2006ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தவர். இவர் கர்நாடக மாநிலம் மற்றும் சிபிஐ இயக்கத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை சிறப்பு குழுவிற்குட்பட்டப் பகுதிகளிலும் மிகவும் தீவிரமாக பணியாற்றியுள்ளார்.

இவர் மீது கர்நாடக மாநிலம், சிமோகா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் 44 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு கர்நாடக அரசு ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது.

மாவோயிஸ்ட்டுகள் மனம் திருந்தினால் தமிழ்நாடு காவல் துறை பாதுகாப்பளிக்கும்

மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்தியக் குழு உறுப்பினரும், அவ்வியக்கத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவின் பொறுப்பாளருமான இவரது கணவர் பி.ஜி. கிருஷ்ணமூர்த்தி கடந்த 09.11.2021 அன்று கேரள மாநில காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் 25 -க்கும் மேலான வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.

இவர் குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்கு கர்நாடக அரசு ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது.

பின்னர் மாவோயிஸ்ட் பிரபா தனது கணவர் கைதான பிறகு, மாவோயிஸ்ட் இயக்க செயல்பாடுகளிலிருந்து விலகி, பொதுவாழ்விற்கு திரும்ப முடிவு செய்துள்ளதாகவும், அவர் பக்கவாத நோய் காரணமாக அவதியுற்று வரும் நிலையில், சரணடைய முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று(டிச.19) செய்தியாளர்களைச் சந்தித்த வேலூர் சரக காவல் துறை துணை தலைவர் ஏ.ஜி. பாபு கூறுகையில், 'தீவிரவாத நடவடிக்கைகளை கைவிட்டு இயல்பு வாழ்க்கை வாழ முற்படும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை புனரமைத்து, அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், தற்பொழுது தமிழ்நாடு அரசு சரணடைதல் மற்றும் புனரமைப்புக் கொள்கையை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது.

மறுவாழ்வு வேண்டி பெண் மாவோயிஸ்ட்

அதன்படி சரணடையும் அவர்கள் கட்சியில் வகித்த பதவியின் அடிப்படையில் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை மறுவாழ்வு நிதி வழங்கவும், மாத உதவித் தொகையாக மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 4,000 வழங்கவும் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு தலைமறைவாக உள்ள மாவோயிஸ்ட்கள் மனம் திருந்தி, தீவிரவாத நடவடிக்கைகளை கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தமிழ்நாடு காவல் துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மேலும், இது போன்ற தீவிரவாத முயற்சிகளையும் தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோருக்கு மனம் திருந்தி இயல்பு வாழ்க்கையில் ஈடுபட இந்நிகழ்வு தூண்டுகோலாக அமையும்' என்றார்.

இதையும் படிங்க: பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.