ETV Bharat / city

ஆனைமலையில் குண்டம் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

author img

By

Published : Feb 17, 2022, 2:28 PM IST

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

அதன்படி இந்தாண்டு குண்டம் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. குண்டம் திருவிழாவின் ஒரு பகுதியான மயான பூஜை கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

ஆனைமலையில் குண்டம் திருவிழா கோலாகலம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை (பிப்ரவரி 17) சுமார் 9 மணியளவில் தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர், தமிழ்வாணன், புலவர் லோகநாதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டிவிட்டார்.

அதன்பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் ஆகியோரைத் தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர். கொடியேற்றம் நாளிலிருந்து விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர்.

பலத்த பாதுகாப்புப் படை

ஆண் பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கென ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வேண்டுதலை நிறைவேற்றினர். குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

அரசு மருத்துவர்கள், செவிலியர் அங்கு அவசர தேவைகளுக்காகப் பணியமர்த்தப்பட்டனர். குண்டம் திருவிழாவுக்கென அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

வால்பாறையில் ஏராளமான காவல் துறையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், பெண் காவல் துறை, போக்குவரத்து காவல் துறை மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நாளை (பிப்ரவரி 18) கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், மகா முனி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். நாளை மறுநாள் (பிப்ரவரி19) மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் குண்டம் விழா நிறைவுபெறுகிறது.

இதையும் படிங்க: மாசிமகம் - காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.