ETV Bharat / city

விக்னேஷ் லாக்கப் மரணம்: காவல் ஆணையர் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

author img

By

Published : May 6, 2022, 12:16 PM IST

மாநில மனித உரிமை ஆணையம், விக்னேஷ் லாக்கப் மரணம், SHRC
மாநில மனித உரிமை ஆணையம்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் விக்னேஷ், காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை கடந்த ஏப். 18ஆம் தேதி உதவி ஆய்வாளர் தலைமையிலான தலைமைச் செயலக காலனி காவலர்கள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது விக்னேஷிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சந்தேகமான முறையில் உயிரிழந்தார்.

வலிப்பு வந்து விக்னேஷ் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவலர்கள் தாக்கியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தார் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், விக்னேஷை காவல்துறையினர் துரத்திச் சென்று தாக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி காவலர்கள் தற்போது இந்த வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், விக்னேஷ் மரணம் குறித்து நாளிதழில் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கு குறித்து 4 வாரங்களில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Vignesh Lockup Death: 'விக்னேஷ் மரணவழக்கில் 15 நாட்களில் அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளோம்' - அருண் ஹெல்டர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.