ETV Bharat / city

'தமிழ்நாடு காவல்துறைக்கு நாட்டிலேயே மிகப்பெரிய அங்கீகாரம்' - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Jul 31, 2022, 3:45 PM IST

தமிழ்நாடு காவல் துறைக்கு குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடி வழங்கும் விழாவில், பெண்களுக்குக் காவல் துறையில் அதிகாரம் அளிப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது எனவும்; காவலர்களின் கோரிக்கைகளுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறைக்கு, 'குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழா' நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத்தலைவரின் கொடி வழங்குதல் விழாவில் பங்கேற்று, கொடியினை துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.

விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு காவல் துறை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. குடியரசுத்தலைவரினுடைய வண்ணக்கொடி என்ற மிக மிக உயர்ந்த அங்கீகாரத்தை நம்முடைய தமிழ்நாடு காவல் துறை பெறுகிறது. அதனை வழங்குவதற்கு துணை குடியரசு தலைவர் வருகை தந்துள்ளார். இச்சிறப்பினை வழங்குவதற்காக வருகை தந்துள்ள துணை குடியரசுத்தலைவருக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

குடியரசுத்தலைவரின் சிறப்புக்கொடி: இது இரட்டை மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்குகிறது. தமிழ்நாடு காவல் துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே கிடைத்திருக்கக்கூடிய வரலாற்றுமிகு பெருமை இது. தனிப்பட்ட ஒரு காவலருக்குக் கிடைத்த பெருமை அல்ல இது, ஒட்டுமொத்தமாக அனைத்துக் காவலர்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பெருமை ஆகும்.

குடியரசுத் தலைவரின் கொடியை தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்கிய துணை குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவரின் கொடியை தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்கிய துணை குடியரசுத் தலைவர்

இரவு பகல் பாராது, வெயில் மழை பாராது, ஏன், தன் உயிரைப்பற்றிக்கூட கவலைப்படாமல் ஆற்றிய உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. தமிழ்நாடு காவல்துறையானது தனக்குத்தானே சல்யூட் அடித்துக்கொள்ள வேண்டிய பெருமை இது.

பழம்பெரும் நகரமான இந்த சென்னை மாநகரத்தில் 1856ஆம் ஆண்டு அன்றைய மதராஸ் மாநகரில்தான் முதன்முதலில் காவல் துறை வரலாறு தொடங்கியது. 1859ஆம் ஆண்டு மதராஸ் மாகாண காவல் துறைச்சட்டம் இயற்றப்பட்டது. எனவே, நமது காவல் துறை என்பது இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு முன்மாதிரியான காவல் துறை, பொது அமைதியைக் காப்பது, குற்றங்களில் இருந்து மக்களைக் காப்பது, சட்டங்களைக் காப்பது, பொது மக்களைக் காப்பது, ஒட்டுமொத்தமாகச் சொன்னால் மக்களைக் காப்பது, இதுதான் உங்களது முழு முதல் பணி ஆகும்.

பெண்கள் காவல்துறைப் பணியில் முன்னோடி: இன்று காவல்துறையில் 1 டி.ஜி.பி, 2 ஏ.டி.ஜி.பி, 14 ஐ.ஜி முதலிய பெண் காவல் உயர் அலுவலர்களும், 20,000 பெண் காவலர்களும் களப்பணியாற்றி வருகிறார்கள். பெண்களுக்குக் காவல்துறையில் அதிகாரம் அளித்ததில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு.

கைரேகைப் பிரிவு, மோப்ப நாய் பிரிவு, புகைப்படப் பிரிவு, கணினித் தொழில்நுட்பப்பிரிவு, கடலோரப் பாதுகாப்புப் பிரிவு, மகளிர் கமாண்டோ பிரிவு எனப்பல்வேறு பிரிவுகள், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக மட்டுமல்ல, முன்னணியிலும் நமது தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது.

அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கடந்த 30 ஆண்டுகளாகச் சிறப்பாக செயல்பட்டு, பல பதக்கங்களை வென்று வருவதை நினைக்கும்போது ஒவ்வொரு தமிழ்நாட்டவரும் பெருமை கொள்ளக்கூடிய அளவில் அமைந்திருக்கிறது. கடந்த ஓராண்டு காலமாக காவல் துறையின் செயல்பாடு முன்பைவிட மிக அதிகளவில் பாராட்டும்படியாக உள்ளது.

காவல்நிலைய மரணங்கள் நிலை: காவல் நிலைய மரணம் 2018-ஆம் ஆண்டு 17 மரணங்கள் என்று பதிவானது, 2021ஆம் ஆண்டு 4 மரணங்களாக அது குறைந்துள்ளது. குறைந்துள்ளது என்றுதான் சொன்னேனே தவிர, முற்றிலும் இல்லை என்று நான் சொல்லவில்லை.

காவல்நிலைய மரணங்களே இல்லை என்று சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தித்தாருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். குற்றங்களைக்குறைக்கும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும்.

காவலர்களின் கோரிக்கைகளுக்குத் தனி ஆணையம்: பாலியல், போக்சோ சட்டங்களில் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கியாக வேண்டும். அமைதியான மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதால்தான் ஏராளமான புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன.

மக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். காவலர்களை நாங்கள் பாதுகாக்கிறோம். காவலர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்காகத்தான் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில், காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று பல நலத்திட்டங்களை நிறைவேற்றித்தருவோம் என உறுதி அளிக்கிறேன். காவல் அலுவலர்களும், காவல் ஆளிநர்களும் கவலையின்றிப் பணியாற்றுவதற்கான சூழல்களை அமைத்துத்தர இந்த அரசு தயாராக உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குடியரசுத் தலைவரின் விருது பெற்றிருக்கும் தமிழ்நாடு காவல்துறையினர் தங்கள் காக்கிச்சட்டையில் அதன் அடையாளமான கொடியினை அணிந்துசெல்வார்கள். ‘நிஸான்’ என்றழைக்கப்படும் இந்தச்சின்னம் உங்களுக்குப் பெருமை சேர்க்கும்" எனக்கூறினார்.

இதையும் படிங்க: வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலை - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.