சென்னை: திருவல்லிக்கேணி ரோட்டரி நகரைச் சேர்ந்தவர் முகமது மீரான். இவரின் வீட்டின் மேல்தளத்தில் இரண்டு ஏசி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (ஏப்.16) மதியம் மீரான் உள்பட அவரின் குடும்பத்தினர் ஐந்து பேர் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது திடீரென ஏசியில் இருந்து மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது. உடனே தீ மளமளவென பற்றி அரை முழுவதும் பரவி எரிந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் மயிலாப்பூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் மயிலாப்பூர், தேனாம்பேட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்துசென்று தீயை அரை மணி நேரம் போராடி அணைத்தனர்.
மேலும், வீட்டில் மயக்க நிலையில் இருந்த ஐந்து பேரையும் மீட்டனர். இதில் மீரான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்ற நான்கு பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்த மீனவரின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் கீழ் தளத்தில் ஐந்து சிலிண்டர்கள் இருந்துள்ளது. முன்னெச்சரிக்கையாக அனைத்து சிலிண்டர்களையும் தீயணைப்புத் துறையினர் அங்கிருந்து அகற்றி உள்ளனர்.
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு: கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு!'