ETV Bharat / city

’கல்விக்கூடங்களை இன்னும் எவ்வளவு காலம் இப்படி வைத்திருக்கப் போகிறோம்...’ - ஜோதிமணி கவலை!

author img

By

Published : Nov 14, 2021, 3:17 PM IST

ஜோதிமணி
ஜோதிமணி

”இன்னும் எவ்வளவு காலம் கல்விக்கூடங்களை இப்படி பாதுகாப்பற்ற இடங்களாக வைத்துக் கொண்டிருக்கப் போகிறோம்? நேற்று பத்மா சேஷாத்ரி, இன்று சின்மயா வித்தியாலயா நாளை?” என ஜோதிமணி எம்பி கேள்வியெழுப்பியுள்ளார்.

கோவையில் 12ஆம் வகுப்பு மாணவி பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மாணவியின் மரணத்துக்கு காரணமான ஆசிரியர் மற்றும் பள்ளியின் முன்னாள் முதல்வர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல அரசியல் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, கரூர் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலியல் துன்புறுத்தலால் கோவை மாணவி தற்கொலை செய்து கொண்டது மனதை கனக்கச் செய்கிறது. குற்றவாளி ஒரு ஆசிரியர். குற்றத்திற்கு துணை நின்றது பள்ளி நிர்வாகம். எவ்வளவு கொடுமை! ஒரு பெண் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் அளித்த பிறகும் எப்படி ஒரு பள்ளி நிர்வாகம் அதைக் கடந்துபோக முடியும்?

பல பள்ளிகளில் பல ஆண்டுகளாக நடைபெறும் கொடுமை!

இந்தப் பாலியல் கொடுமை ஏதோ ஒரு பள்ளியில், ஒரு மாணவிக்கு நேர்ந்த சாதாரண குற்றமல்ல. பல பள்ளிகளில் பல நூறு மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக இந்தக் கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதை ஒரு சமூகமாக நாம் இப்படியே கடந்து போய்விடமுடியுமா? இதற்கு ஒரு தீர்வு காண வேண்டாமா?

அந்த இளம்பெண் எத்தனை துயரை, வேதனையை, அவமானத்தை அடைந்திருக்கும்? யாரிடமும் சொல்ல முடியாமல் எப்படி இந்தக் கொடுமையை தன்னந்தனியே சுமந்திருக்கும்? மீண்டும் எந்த மாதிரியான மனநிலையோடு அந்தக் கொடூரமான பாலியல் குற்றவாளியை எதிர்கொண்டிருக்கும்? பள்ளி நிர்வாகம் ‘பேருந்தில் யாரோ ஒருவர் இடித்துவிட்டதுபோல் நினைத்துக்கொள்’ என்று கடந்து போனபோது எப்படி துடித்துப் போயிருக்கும்?

நேற்று பத்மா சேஷாத்ரி, இன்று சின்மயா வித்தியாலயா!

இனி இந்த வாழ்வே வேண்டாம் என்று ஒரு இளம்பெண் முடிவுக்கு வரும்போது மரணம் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும் அரசு அமைப்புகளுக்கும்கூட நிகழ்கிறது.

நாம் இத்தனை பேர் இருந்தும் அந்தக் குழந்தை தனக்கு இழைக்கபப்ட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக தன்னந்தனியே போராடித் தோல்வியுற்று இறுதியாக மரணத்தை தேர்ந்தெடுத்துவிட்டது. எவ்வளவு பெரிய கொடுமை, வலி, வேதனை!

இன்னும் எவ்வளவு காலம் கல்விக்கூடங்களை இப்படி பாதுகாப்பற்ற இடங்களாக வைத்துக் கொண்டிருக்கப் போகிறோம்? நேற்று பத்மா சேஷாத்ரி, இன்று சின்மயா வித்தியாலயா நாளை?

குற்றவாளிபோல் நடத்தப்படும் பாதிக்கப்பட்டோர்

நமது பிள்ளைகள் ஏன் பள்ளியில் நடக்கும் பாலியல் கொடுமைகளை வெளியில், வீட்டில் சொல்ல முடியவில்லை? ஏன் பாலியல் குற்றவாளிகள் அச்சமற்றுத் திரியும் வீதிகளில், பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளைப் போல் நடத்தப்படுகின்றனர்? ஏன் அவர்களுக்கு யாருமில்லை? சட்டம், நீதி அவர்கள் வாழும்போது ஏன் வரவில்லை?

இப்படி எத்தனையோ தீராத கேள்விகள் உள்ளன. வெறும் சட்டமும் தண்டனையும் மட்டும் இந்தக் கொடுமையான குற்றங்களை தடுத்துவிடாது. அவற்றோடு வலுவான உளவியல் ஆதரவும், ஆழமான பாலியல் கல்வியும் தேவை.

’கல்விக்கூடங்களில் சுதந்திரமான அமைப்புகள் தேவை’

கல்விக்கூடங்களில் இம்மாதிரியான பாலியல் குற்றங்கள், சாதிய, பாலின ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் சுதந்திரமான, கனிவுமிகுந்த, அதிகாரம் மிக்க அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் அச்சமற்று அந்த அமைப்புகளை அணுகும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

உளவியல்,சட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட சுதந்திரமான அமைப்புகள் இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. அவை தொடர்ந்து இயங்குவதையும் உறுதிசெய்ய வேண்டும்.

உண்மையான கல்விக்கு அடிப்படையான தேவை கண்ணியமும், பாதுகாப்பான சூழலுமே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி கொடுமை நடக்கும்போது வருத்தப்பட்டு கடந்துபோவதில் பயன் இல்லை. நமது பிள்ளைகளை பாதுகாக்க முடியாத கையறு நிலையில் நின்று கண்ணீர் வடிப்பதால் நடக்கப்போவது ஒன்றுமில்லை. தேவை தீர்க்கமான செயல்பாடு மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'தேவை போக்சோ விழிப்புணர்வு... அழையுங்கள் 14417 என்ற எண்ணுக்கு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.