ETV Bharat / city

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் மாஸ்க்: ’இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு அபராதம்!

author img

By

Published : Aug 20, 2021, 6:57 AM IST

இண்டிகோ ஏர்லைன்ஸ், chennai corporation, chennai corporation charges penalty for indigo airlines
indigo airlines

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தியதால் ’இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கரோனா தொற்று காரணமாக விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்கள் முகக்கவசங்கள், மூன்றடுக்கு முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ’இண்டிகோ ஏர்லைன்ஸ்’ மூலமாக விமானத்தில் பயணம் செய்யக் கூடிய நபர்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் மூலம் முகக்கவசம் தயாரிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த முகக்கவசத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மூலமாக ஆய்வு மேற்கொண்டதில், முகக்கவசம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது எனத் தெரிய வந்தது.

உத்தரவும் அறிவுரையும்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தியதால் அடுத்த ஏழு நாள்களுக்குள் 25 ஆயிரம் ரூபாய் அபராத தொகையைச் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பிளாஸ்டிக்கைகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா கால அபராதங்கள்

மேலும், பொதுமக்கள், வணிக வளாகங்கள், அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

”அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதனால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிப்பதை கண்காணிக்கும் வகையில், வருவாய்த் துறை, மண்டல அமலாக்கக் குழுக்களின் மூலம் நாள்தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி நாளொன்றுக்கு 800 நபர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது” எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நீதிபதி கிருபாகரன் நாளையுடன் பணி ஓய்வு - அவர் அளித்த முக்கிய தீர்ப்புகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.