ETV Bharat / bharat

காற்று தரக் குறியீடு என்றால் என்ன? - டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாடு எந்த வகையில் உள்ளது?

author img

By ANI

Published : Nov 8, 2023, 2:21 PM IST

காற்று தரக் குறியீடு எண் என்றால் என்ன
டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு.

Air Quality Index: டெல்லியில் காற்று மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் நவம்பர் 13ஆம் தேதி முதல் ‘ஆட்- ஈவன்’ விதியை (Odd- Even rule) டெல்லி மாநில அரசு அமல்படுத்த உள்ளது.

டெல்லி: தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இன்று (நவ.8) டெல்லியில் காற்றின் தரம் கடுமையான வகையில் பாதிக்கப்பட்டு, புகை மூட்டத்துடன் காணப்படுகிறது. SAFAR இந்தியாவின் நிலவரப்படி, டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு (Air Quality Index) 395ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

காற்று தரக் குறியீடு எண் என்றால் என்ன? மனிதர்கள் மற்றும் இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் சுவாசிக்க தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதன் அளவீடு. மேலும், இது மக்களுக்கு மாசுபட்ட காற்று ஏற்படுத்தக் கூடிய ஆபத்தை வெளிப்படுத்துகிறது. இந்த முறை முதல் முறையாக காற்றின் தரத்தை கண்காணிக்க 2014ஆம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது.

காற்று தரக் குறியீடு அட்டவணை
காற்று தரக் குறியீடு அட்டவணை

காற்றின் மாசுபாடை மக்கள் தெரிந்து கொள்வதற்காக 240 முக்கிய நகரங்களில் அறிவிப்பு பலகையை மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்தது. அந்த வகையில், காற்று மாசுபாட்டைக் கண்டறிய காற்றுத் தரக் குறியீடு எண்கள் 0 முதல் 500 வரை என ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • 0-50: ஆரோக்கியமான சூழல் மற்றும் குறைந்த பாதிப்பைக் குறிக்கிறது.
  • 51 - 100: நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கு எளிதில் மூச்சுக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • 100 -200: நுரையிரல், இருதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
  • 201-300: காற்று மோசமான நிலையை அடைந்து, ஏற்கனவே மூச்சுக் கோளாறு, இருதய பிரச்னை உள்ளவர்களின் நிலையை மோசமடையச் செய்கிறது.
  • 301 -400: மிக மோசமான நிலை அடைந்த காற்றை சுவாசிப்பதால், உடல் நிலை மிக மோசமான நிலை அடைந்து பல விளைவுகளை ஏற்படுத்தும்.
  • 401-500: நல்ல உடல் நலத்துடன் இருக்கும் நபர்களுக்கு மூச்சு சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும், டெல்லியின் குருகிராம்-மஹிபால்பூர் பகுதி முற்றிலும் பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்து காணப்படுவதால், மக்கள் நீண்ட நேரம் வெளியில் சுற்றுவதை தவிர்க்கவும், முகக்கவசங்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டெல்லி மாநில அரசு நவம்பர் 13 முதல் ‘ஆட்- ஈவன்’ விதியை (Odd- Even rule) டெல்லியில் மீண்டும் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

ஆட்- ஈவன் விதி என்றால் என்ன? வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை காற்று மாசு அடைவதற்கு முக்கிய கூறாக அமைகிறது. அந்த வகையில், வாகனங்களை தினமும் இயக்குவதை தடுத்து, மாற்று தினத்தில் இயக்குவதால் காற்று மாசுபாடு அடைவதை குறையச் செய்கிறது.

இதையும் படிங்க: கிராஃப் வடிவில் சூரிய கதிர்களை வெளியிட்ட இஸ்ரோ: ஆதித்யா எல்-1ன் அடுத்தடுத்த அப்டேட்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.