ETV Bharat / bharat

உத்தரகாசியில் 12 நாட்களாக தொடரும் மீட்புப் பணி.. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்!

author img

By ANI

Published : Nov 23, 2023, 2:03 PM IST

Uttarkashi tunnel rescue
உத்தரகாசியில் 12 நாட்களாக தொடரும் மீட்புப் பணி

Uttarkashi tunnel rescue: கடந்த 12 நாட்களாக தொடரும் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து மீட்புப் பணி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இன்னும் 12- 14 மணி நேரத்தில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாசி: உத்தரகாண்ட மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால் - யமுனோத்திரி நெடுஞ்சாலையில் மலையைக் குடைந்து சுரங்கம் அமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி, அந்த சுரங்கத்தில் தீடீரென விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தின்போது, பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது வரை, பல தடங்கல்களைக் கடந்து மீட்புப் பணியானது தீவிராமாக நடந்து வருகிறது. மேலும், இந்த நிமிடம் வரை சுரங்கத்தில் சுக்கியுள்ள தொழிலாளர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு ஆகியவை மீட்புப் படையால் 6 அங்குல பைப் மூலம் அனுப்பப்படுகிறது. மேலும், தொழிலாளர்கள் மீட்கப்படவும், அவர்களைக் கொண்டு செல்வதற்காக 41 ஆம்புலன்ஸ்களும், தேவைப்பட்டால் அவர்களைக் கொண்டு செல்ல ஹெலிகாப்டரும் தயார் நிலையில் உள்ளது.

சுரங்க விபத்தில் 41 தொழிலாளர்களும் சிக்கி, தற்போது 12 நாட்கள் ஆன நிலையில், நேற்று (நவ.22) சுரங்கத்தில் செங்குத்தாக துளையிட்டு மீட்பதற்கான இடம் கண்டறியப்பட்டு, துளையிட்டு மீட்பதற்கான பணிகள் தீவிரம் அடைந்தது. இறுதிகட்ட மீட்புப் பணி கிட்டத்தட்ட நெருங்கிய நிலையில், துளையிடும் எந்திரத்தின் பிளேடுகள் சேதமடைந்தது. பின்னர் துளையிடும் ஆகர் எந்திரத்தின் பிளேடுகளை மாற்றும் பணியால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீட்புப்பணி துவங்கப்பட்டது. தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இயக்குநர் அதுல் கர்வால் கூறியதாவது, "சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை உள்ளது. அவர்கள் வெளியே வந்ததும் சிகிச்சை அளிப்பதற்காக எங்களது குழு தயாராக உள்ளது. இந்த நாள் இறுதிக்குள் மீட்புப்பணி நிச்சயம் நிறைவடையும்" என தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக ஆலோசகர் (PMO) பாஸ்கர் குல்பே கூறியதாவது, “தொழிலாளர்கள் வெளியே வந்ததும், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளது. தேவைப்பட்டால், காயமடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலமும் அழைத்துச் செல்லலாம். தொழிலாளர்களை இன்னும் 12 - 14 மணி நேரத்தில் அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

முன்னதாக, மீட்புப் பணியின்போது இரும்புக்கம்பிகள் தடையாக இருந்தது. அதனால் மீட்புப் பணியில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தடையாக இருந்த கம்பிகள் அகற்றப்பட்டு, தற்போது 45 மீட்டருக்கு, 6 மீட்டர் முன்னால் உள்ளோம். நேற்றிரவு தோண்டும் பணியில் இரும்பு உலோகம் இருந்ததால் பணி நிறுத்தப்பட்டது. இனி எந்த ஒரு இடையூறும் ஏற்படாது என நம்புகின்றோம்" என தெரிவித்துள்ளார்.

மேலும், சினியாலிசூரில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் 41 படுக்கைகள், மருத்துவப் பரிசோதனைக்காக தயாராக உள்ளது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் வெளியே வந்ததும், அவர்கள் அனைவரும் விரைவான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் கனமழை; ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீர்.. 80 சதவீத நீர்தேக்கம் இல்லை என மேயர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.