ETV Bharat / bharat

Khalistan : லண்டனில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு - என்.ஐ.ஏ. விசாரணை!

author img

By

Published : Apr 18, 2023, 1:00 PM IST

NIA
NIA

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ விசாரிக்கிறது.

டெல்லி : லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தின் போது இந்திய தேசியக் கொடி அவமதிப்பு செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரிக்கிறது. சீக்கியர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதில் ஒரு அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங்கின் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு பல்வேறு நாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் கலவர தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் திரண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள், அம்ரித் பால் சிங்கிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். காலிஸ்தான் ஜிந்தாபாத் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பிய அவர்கள் தூதரகத்தில் பறந்து கொண்டு இருந்த இந்திய தேசியக் கொடியை அகற்றி அவமதிப்பு செய்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்திய தூதரகம் முன் பறந்து கொண்டு இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது. சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பிரிட்டீஷ் தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய வெளியுறவு அமைச்சகம், தூதரகம் மற்றும் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த கோரியது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் தடுப்பு அமைப்பு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய தூதரகம் முன் காலிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் ஒலிக்கப்பட்டதன் பின்னணி குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.

பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்திய தூதரகம் முன் காலிஸ்தான் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் நகரங்களில் உள்ள இந்திய தூதரகம் முன் திரண்ட காலிஸ்தான் அமைப்பினர், கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் தூதரக உள்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய தூதரகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையும் படிங்க : அரிசி ஆலை இடிந்து தரைமட்டம் - தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.