கர்நாடகா( தர்வாட்): இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் அந்த வங்கியின் ஏடிஎம் எந்திரத்தில் ரூ. 500 பணம் எடுக்க முயன்றார். அப்போது அவரது கணக்கில் இருந்து ரூ.500 டெபிட் ஆகியது, ஆனால் எந்திரத்தில் இருந்து ரூ.500 வெளியே வரவில்லை. அதுகுறித்து வங்கிக்கு தெரிவித்தும் உரிய நேரத்தில் பணம் திருப்பி தரப்படாமல் இருந்துவந்துள்ளது.
இதனால் அந்த வாடிக்கையாளர் வங்கி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்வாட் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் நீதிமன்றம், ஒரு ஏடிஎம் பணம் செலுத்தத் தவறினால், அந்நாளிலிருந்து 6 நாட்களுக்குள் கணக்கில் பணத்தை வரவு வைக்க வேண்டும். 6 நாட்களுக்குப் பிறகு ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு ரூ. 100 வீதம் கால தாமதத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் மீறியுள்ளார்.
ஆகவே, 2020 நவம்பர் 28ஆம் தேதி அன்று பணம் டெபிட் ஆனதையடுத்து ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் 677 நாட்களுக்கு ரூ.67,700 இழப்பீடு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட வேண்டும். அதோடு 8% வட்டியையும் சேர்ந்து வழங்க வேண்டும். குறிப்பாக வங்கி சேவையை சரியாக வழங்காமைக்கு காரணமாக புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.25,000 இழப்பீடும், இந்த வழக்கிற்காக செலவு செய்த ரூ.10,000 சேர்த்து மொத்த இழப்பீடாக ரூ.1,02,700 வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள்... மூன்று பெண்கள் உடபட 12 பேர் கைது