ETV Bharat / bharat

சந்தேகக் கண்ணாடிகளின் வழியே காஷ்மீர் குறித்த பார்வை!

author img

By

Published : Apr 19, 2020, 1:46 PM IST

kashmir
kashmir

ஸ்ரீநகர்: கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 10 மாவட்டங்கள் சிவப்புக் குறியீட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள கள நிலவரம் குறித்து நமது ஈடிவி பாரத் தலைமை செய்தியாசிரியர் பிலால் பட் எழுதியுள்ள சிறப்பு கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

சச்சரவு என்பது அரசியல் வடிவிலோ அல்லது வேறு எந்த வடிவில் வந்தாலும் அது சமூகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்தைக் கடுமையாகப் பாதிக்கும். தொடர் சச்சரவுகளைச் சந்திக்கும் சமூகத்தில் நம்பிக்கையின்மை என்பது தீவிரமாக இருக்கும். அது மிகவும் சிறிய அளவிலான சிக்கலைக்கூட பெரும் பாதிப்பாக மாற்றிவிடும்.

இந்தச் சச்சரவு, சிக்கல்கள் சமூகத்தின் முக்கிய அங்கங்களான சமூக மதிப்பீடுகள், பொது சுகாதாரம் உள்ளிட்டவற்றில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தற்போதைய சூழலில் இத்தகைய நம்பிக்கையின்மையைத்தான் காஷ்மீர் சந்திக்கிறது. அதுவும், மாநிலம் பெரிய அளவிலான வாழ்வா, சாவா சிக்கலைச் சந்திக்கும் வேளையில் தீவிர கட்டுப்பாடுகள் காஷ்மீரில் வசிக்கும் 60 லட்சம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் சிவப்பு குறியீட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வைரஸ் பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் கடும் ஊரடங்கு விதிக்கப்பட்டு, அங்கு 5 கிலோமீட்டர் வரை தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பகுதிகளில் இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என வழிகாட்டுதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு குறியீட்டுப் பகுதிகள் சாலைத் தடுப்புகள் அமைத்து பாதுகாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறவும், உள்நுழையவும் சீல்வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இந்தத் தீவிர நடவடிக்கைகள் குறித்து அறிவுஜீவிகள் பலர் விமர்சன கருத்துகளை முன்வைத்தாலும் இது பெரும்பாலான மக்களின் நலன் பாதுகாக்கவே மேற்கொள்ளப்படுகின்றன.

காஷ்மீரில் சிறப்புத் தகுதி நீக்கத்திற்குப்பின் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போதைய கரோனா ஊரடங்கு நடவடிக்கை மக்கள் மத்தியில் ஒடுக்குமுறை குறித்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

தற்போதைய சிவப்பு குறியீட்டுப் பகுதிகள் இதற்கு முன்னர் அரசியல் காரணங்களால் ராணுவ நடவடிக்கைகளுக்குள்படுத்தப்பட்டு, அங்கு வன்முறை போராட்டங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் பகுதி அரசு ஏற்படுத்தும் நடவடிக்கையில் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் பகுதியாகவே இருந்துவந்துள்ளது. அங்கு எல்.இ.டி. விளக்குகள் விநியோகம் செய்யப்படும்போது அதன்மூலம் தங்களை உளவு பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்து மக்கள் தங்கள் எல்.இ.டி. விளக்குகளை தெருக்களில் தூக்கி எறிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தச் சந்தேகப் பார்வை என்பது சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் மேலும் அதிகரித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் காஷ்மீருக்கு புதியது இல்லை என்றாலும், அங்கு ஏற்பட்டுள்ள தொலைபேசி கட்டுப்பாடு, இணையக் கட்டுப்பாடுகள் மக்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினர் இதன் காரணமாக பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

அங்குள்ள பகுதிகளில் இதுவரை 2ஜி இணைய சேவை மட்டுமே செயல்பட்டுவரும் நிலையில் அங்கு போராட்டங்கள், கல்வீச்சுகள் ஆகியவற்ற தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலை தாங்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் எனப் பிரிவினை சக்திகள் காத்துக்கொண்டிருக்கின்றன. தங்களின் அரசியல் பூதக்கண்ணாடி மூலம் கூர்ந்துபார்த்து, மக்களின் உணர்வை தங்கள் வசம் எவ்வாறு வைத்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

எல்லைப்பகுதியில் உள்ள பந்திப்போரா, பாரமுல்லா, குப்வாரா ஆகிய மாவட்டங்கள் சிவப்பு குறியீட்டுப் பகுதிகளில் உள்ள நிலையில் அங்கு பிரிவினைவாதிகள் தாக்கம் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோபியன், புல்வாமா ஆகிய மாவட்டங்களிலும் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை அரசு எக்காரணத்தைக் கொண்டும் மக்கள் அத்துமீறி கூடும் சூழலை உருவாக்கிவிடக் கூடாது எனவும், மக்கள் அதிகமாக ஒன்றாகக் கூடி வாழும் பகுதியில், ஏற்படும் கூட்டமானது அரசு நடவடிக்கையை ஒட்டுமொத்தமாக வீணடித்துவிடும்.

இந்த நெருக்கடியான சூழலில் பாதுகாப்புப் படையினரின் நிலையும் அச்சத்திற்குரியதாக உள்ளது. எதிர்ப்பாளர்களைக் கையாளும்போது ராணுவத்தினரும் வைரஸ் பாதிப்பிற்குள்ளாகும் சூழல் உருவாகும்பட்சத்தில் அது தேவையற்ற சிக்கலில் கொண்டுசேர்த்துவிடும்.

எனவே இந்தச் சூழலில் இருதரப்பும் சந்தேகத்தை விட்டு நம்பிக்கையின் அடிப்படையில் தூய்மையான மனத்துடன் திறந்த எண்ணத்துடன் எதிர்கொள்வதே இந்தச் சிக்கலை எதிர்கொள்வதன் சிறப்பான வழி. சந்தேக எண்ணம் நீங்கி வடுக்கள் ஆறுவதற்கு அனைவரும் உணர்வுப்பூர்வமாக இணைய வேண்டிய நேரமிது.

இதையும் படிங்க: மூவர்ணக் கொடி போர்த்திய ஆல்ப்ஸ் மலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.