தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் விழா.. பள்ளிவாசல் முன்பாக தீக்குண்டம் வார்ப்பு! - thalavadi mariamman temple
Published : Mar 28, 2024, 5:57 PM IST
ஈரோடு: தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயிலின் முன்புற பக்கவாட்டில் பெரிய பள்ளி வாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளி வாசல் முன்பாக தீக்குண்டம் வார்க்கப்பட்டு, பூசாரி மட்டும் தீ மிதிப்பது இக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.
தமிழக-கர்நாடகா எல்லை அருகே அமைந்துள்ள இக்கோயிலின் குண்டம் திருவிழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. நேற்று காலை முதல் மாலை வரை சிறப்புப் பூஜைகள் நடைபெற்று மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்குச் சிறப்பு மலர் மற்றும் ஆபரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுச் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
இதனையடுத்து, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு அலங்கார வீதி உலா தொடங்கியது. இதில், கோயில் அருகே உள்ள பள்ளி வாசல் முன்பாக 60 அடி தீக்குண்டம் வார்க்கப்பட்டது. குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் முழுமையாக எரிந்து இன்று காலையில் குண்டம் தயார் செய்யப்பட்டது. இதனையடுத்து, போயர் வீதி மற்றும் அம்பேத்கர் வீதிகளில் மலர்களால் பாதை அமைத்து பூசாரி சிவன்னா அழைத்து வரப்பட்டு குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார்.
அதனைத்தொடர்ந்து, பக்தர்கள் அனைவரும் குண்டத்தைத் தொட்டு வணங்கினர். இந்த குண்டம் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். காலை நேரத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதால், தொழுகைக்குப் பின் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு! - Annamalai Election Nomination