திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் தேர் திருவிழா! - Vadaranyeswarar temple festival
Published : Mar 23, 2024, 1:30 PM IST
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உடன் இணைந்த திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில், ஆடல் வள்ளல் நடராஜப்பெருமானின் ஐம்பெரும் சபைகளில் முதல் சபையாக திகழ்கிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா கடந்த 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை, இரவு உற்சவர் வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மன் திருவாலங்காடின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கமல தேர் புஷ்பத்தால் அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கமலத் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு திருக்கோயில் மாடவீதியில் புறப்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றபதால் பக்தர்கள் பாதுகாப்புக்காக திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.