நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா; காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்!
Published : Feb 13, 2024, 2:33 PM IST
திண்டுக்கல்: தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று, நத்தம் மாரியம்மன் கோயில். இக்கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி பெருந்திருவிழா, பிப்ரவரி 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று (பிப்.12), பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் நீராடி, மஞ்சள் ஆடைகள் அணிந்து, தீர்த்தக் குடங்கள் எடுத்து வரும் நிகழ்வு நடந்தது.
முன்னதாக, அரண்மனை சந்தனக் கருப்பு கோயிலில் கூடிய பக்தர்கள், அங்கிருந்து புறப்பட்டு, மேளதாளம் முழங்க தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அனைவரும் ‘கோவிந்தா..கோவிந்தா’ என்கிற கோஷங்கள் எழுப்பினர். அதன் பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, மஞ்சள் காப்பு கட்டி, தங்கள் 15 நாள் விரதத்தை தொடங்கினர். இது குறித்து கோயில் பூசாரி கணேசன் கூறுகையில், "இன்று முதல் 15 நாட்கள் பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து பூக்குழி இறங்குவர். அந்த வகையில், பிப்ரவரி 27ஆம் தேதி காலை கழுகுமரம் ஊன்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெறும்" எனத் தெரிவித்தார்.