மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
Published : Feb 10, 2024, 8:22 AM IST
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் 18 நாட்கள் நடைபெறும் குண்டம் திருவிழா நேற்று (பிப்.9) தை மாதம் அமாவாசையன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் மாசாணியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். அத்தகைய புகழ்பெற்ற மாசாணியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு குண்டம் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 85 அடி உயரம் கொண்ட கொடி மரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மாசாணியம்மன் முறை தாரர்கள் மூலம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 18 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகச்சியான, குண்டம் இறங்கும் நிகழ்வு வருகிற 25ஆம் தேதி நடைபெற உள்ளது.