விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை.. டிராக்டர் மூலம் விரட்டிய விவசாயிகள்! - wild elephant near Talavadi hills
Published : Apr 18, 2024, 4:22 PM IST
ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் நேற்று (ஏப்.17) விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை, விவசாயிகள் ஒரு மணி நேரம் போராடி டிராக்டர் மூலம் விரட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள், அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து, விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில், நேற்று (ஏப்.17) நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தாளவாடி மலைப்பகுதியில் உள்ள நெய்தாளபுரம் கிராமத்திற்குள் நுழைந்த ஒரு காட்டு யானை, விவசாயத் தோட்டத்தில் இருந்த பயிர்களை சேதப்படுத்துவதைக் கண்டு அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர்.
இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து டார்ச் லைட் மூலம் யானை நடமாட்டத்தைக் கண்டு பிடித்து, டிராக்டரை பயன்படுத்தி ஒரு மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.