கம்பத்தில் ஸ்ரீ நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவ பட்டத்துக்காரராக 7 வயது சிறுவன் தேர்வு! - Nandagopalan Thampuran Temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 11:42 AM IST

Updated : Apr 30, 2024, 11:54 AM IST

thumbnail

தேனி: கம்பத்தில் உள்ள ஸ்ரீ நந்தகோபாலன் தம்புரான் கோயிலில் ஆயிரம் காளைகள் கொண்ட மாட்டுத் தொழுவத்திற்கு, பட்டத்துக்காரராக 7வயது சிறுவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள நாட்டுக்கல் பகுதியில் அருள்மிகு நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத் தொழுவம் உள்ளது. இங்கு, 400 ஆண்டுகளுக்கும் மேலாக மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இக்கோயிலில் சாமி விக்ரங்கள் இல்லாததால், மாடுகளில் ஒன்றை பட்டத்துக்காளையாகத் தேர்வு செய்து, அதையே தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

மாட்டுத் தொழுவத்தில் பூஜை மற்றும் நிர்வாகத்துக்காக கோடியப்பகவுடர், பூசாரியப்பனார், பெரியமனைக்காரர், பட்டத்துக்காரர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 4 பதவிகளில் உள்ளவர்கள் கடவுளின் பிள்ளைகள் என அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் எந்த ஒரு துக்க நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளக் கூடாது. தொழுவத்தில் உள்ள பட்டத்துக்காளை இறந்தால் மட்டும் இறுதி மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில், இதுவரை பட்டத்துக்காரர் பதவியில் இருந்தவர் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இதனைத் தொடர்ந்து புதிய பட்டத்துக்காரருக்கான தேர்வு நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத் தொழுவ வளாகத்தில் நடைபெற்றது

இதில், ஆனந்தகுமார் என்பவரது மகன் ஆதவன் (7) என்ற சிறுவன் புதிய பட்டத்துக்காரராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஊர்மக்கள் அச்சிறுவனுக்கு பட்டம் சூட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Last Updated : Apr 30, 2024, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.