ETV Bharat / state

“இது மோடி புளுகு”.. பாஜகவை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 4:26 PM IST

TN CM MK Stalin
TN CM MK Stalin

TN CM MK Stalin: தமிழர் நலனுக்கு எதிரான, அதிமுக - பாஜக என்ற கள்ள கூட்டணிக்கு எதிராக, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயக சக்திகள் திமுக கூட்டணியில் ஒற்றுமையாக நிற்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொள்ளாச்சியில் இன்று (மார்ச் 13) நடைபெற்றது.

இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சேர்த்து மொத்தம் ரூ.1,273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 57,325 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், "பொலிவு மிகுந்த பொள்ளாச்சி நகரில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு பங்கேற்க வந்துள்ளேன்.

தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்பு, துணிவுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். வாக்களிக்கத் தவறியவர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில், 3 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றிய பெருமையுடன் உங்களைப் பார்க்கிறேன்.

உங்களிடம் உள்ள மகிழ்ச்சியையும், எழுச்சியையும் பார்க்கும்போது, நாடாளுமன்றத் தேர்தல், பொதுத்தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் என்ற நம்பிக்கை வந்துள்ளது. 'பொதியை ஏற்றி வண்டியில் பொள்ளாச்சி சந்தையிலே' என்ற பாடலை முதலமைச்சர் சுட்டிக்காட்டி பொள்ளாச்சி சிறப்புகளை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கோவை மாவட்டத்திற்கு 4 முறை வந்து, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 949 பேருக்கு, ரூ.1,441 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளேன். இன்று 5வது முறையாக வந்துள்ளேன். 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சி சாதனைகளாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம், மகளிருக்கு விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48, மக்களுடன் முதல்வன் திட்டம், நீங்கள் நலமா திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

கடைக்கோடி மக்களிடமும் பேசும் முதலமைச்சர் நான்தான். இதை கர்வத்துடன் சொல்லவில்லை. அடக்கத்துடன் சொல்கிறேன். ஒவ்வொருவர் உணர்வையும் மதிப்பவன் நான். உங்கள் பிரச்னைகளை காது கொடுத்து கேட்பவன் நான்.

அதனால்தான் நீங்கள் நலமா திட்டத்தைக் கொண்டு வந்துள்ளேன். மக்களுக்காகச் சிந்தித்து, சிந்தித்து திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம், தமிழ்நாட்டின் தொழில் வளம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் வளர்கிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது.

இதனைப் பார்த்து பொறாமைப்பட்டு சிலர் பொய்களையும், அவதூறுகளையும் பரப்புகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தக்க பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது. நம் தமிழை, தமிழ்நாட்டை, நமது பெருமை பழிப்பவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது" என்றார்.

மேலும் பேசிய அவர், "அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். 10 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்த அதிமுக செய்ததை, இப்படிப் பட்டியலிட்டுச் சொல்ல முடியுமா? மேற்கு மண்டலத்தை கோட்டை என்கிறார்கள். மேற்கு மண்டலத்திற்கு என்ன நன்மை செய்தார்கள்? அதிமுக அமைச்சர்கள் மேற்கு மண்டலத்திற்கு செய்தது என்ன? மகள்களை பெற்ற அனைவரும் கதற வைத்தது பொள்ளாச்சி சம்பவம்.

பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்த சம்பவம் அதிமுக ஆட்சியில் நடந்தது. அச்சம்பவத்தில் நடவடிக்கை எடுப்பது போல நாடகம் போட்டார்கள். அவ்வழக்கில் சாட்சிகள் மிரட்டப்படுவதை வேடிக்கை பார்த்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல், தூத்துக்குடியில் 13 பேரை சுட்டது எந்த ஆட்சியில்? போதைப்பொருள் விவகாரத்தில் லஞ்சம் கொடுத்த பட்டியலில் அமைச்சர், டிஜிபி பெயர் இருந்தது. அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யாத கூட்டணியினர், இன்று உத்தமர் வேடம் போடுகின்றனர்.

தமிழர் நலனுக்கு எதிரான அதிமுக - பாஜக என்ற கள்ள கூட்டணிக்கு எதிராக, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயக சக்திகள் திமுக கூட்டணியில் ஒற்றுமையாக நிற்கிறோம். நமக்கு உதவி செய்யும் ஆட்சி மத்தியில் அமைந்தால், இன்னும் 10 மடங்கு சாதனைகளைச் செய்ய முடியும்.

பத்து ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாமல், பிரதமர் மோடியின் உத்தரவாதம் என விளம்பரம் செய்து வருகிறார்கள். அவரின் பழைய உத்தரவாதங்களான 15 லட்சம் ரூபாயின் கதி என்ன? 2 கோடி வேலைவாய்ப்பு கதி என்ன? அடுத்த வாரம் தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும் போது, பழைய உத்தரவாதங்களுக்குப் பதில் சொல்லுங்கள் பிரதமர் என நீங்கள் கேட்க வேண்டும்.

பாஜக திட்டங்களை திமுக தடுக்கிறது என பிரதமர் சொல்கிறார். அண்ட புளுகு, ஆகாச புளுகு என்ற பழமொழி போல இது மோடி புளுகு. எந்த திட்டத்தையும் அவர் கொண்டு வரவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை யாரும் எதிர்க்கவில்லை. ஆனாலும் இன்னும் கொண்டு வரவில்லை. பொய் சொன்னால் நம்ப நாங்கள் ஏமாளிகளா? இளிச்சவாயர்களா?

பொய்யும், வாட்ஸ்அப் வதந்திகளும்தான் பாஜகவின் உயிர் மூச்சு. அவை தமிழ்நாடு மக்களிடம் எடுபடாது. அதிமுக - பாஜக கள்ள கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளார்கள். உண்மையான வளர்ச்சியை நமது நாடு காண, பாசிசத்தை வீழ்த்த, தமிழ்நாட்டை உயர்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, பி.ஆர்.நடராசன், கே.சண்முகசுந்தரம், அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் க.செல்வராஜ், முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 9 மாதங்களில் 9 குழந்தை உயிரிழப்பு.. அரசும், மக்களும் மாறிமாறி குற்றச்சாட்டு.. தெலங்கானாவில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.