ETV Bharat / state

"திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடைபெறுகிறது" - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 8:04 PM IST

Seat Distribution of DMK Alliance Parties
Seat Distribution of DMK Alliance Parties

Seat Distribution of DMK Alliance Parties: திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடைபெற்று வருவதாக நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

"திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடைபெறுகிறது" - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி: திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும், பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பட்டாக்களையும் வழங்கினர்.

இதன் தொடர்ச்சியாக அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "திருச்சியில் குடிநீர் விநியோகத்திற்கு மூன்று இடங்களில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி திறப்பு; ரூ.110 கோடியில் மருத்துவமனைகளில் பல்வேறு திட்டம்; பொன்மலை ஜி கார்னர் பகுதியில் பழுதடைந்த பாலம் சீரமைப்பு; குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நலத்திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சப்பூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் பணிகள் இரண்டு மாதத்தில் முடிந்து விடும். முழுமையாகப் பணிகள் முடிந்த பிறகு பேருந்து நிலையம் திறக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான, திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடக்கிறது. திமுகவின் மூத்த தலைவர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பேசி தொகுதிப் பங்கீடு பற்றி முடிவெடுக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாகப் பேசிய அவர், "திருச்சி நாடாளுமன்றத் தொகுதி யாருக்கு என்பது பற்றி திமுக தலைமை தான் சொல்ல வேண்டும். மீண்டும் தற்போதைய உறுப்பினர் திருநாவுக்கரசர் போட்டியிடுவது பற்றி அந்த கட்சியினர் தான் சொல்ல வேண்டும். திமுக கூட்டணியில் நெருக்கமாகவும் தொடர்ந்து பயணிக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அந்தக் கட்சியினரும் திருச்சியில் கூட்டம் நடத்திப் பேச உள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் கொடுத்தது பற்றி விமர்சனத்திற்கு ஒன்றுமில்லை. திமுக தலைவர் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வார். தோழமைக் கட்சியினர் யாரையும் விட்டுவிடாமல் அனுசரித்து பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொகுதிப் பங்கீடு இன்னும் முடியவில்லை அது முடிந்த பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: “முதலமைச்சர் நினைத்தால் நாளையே பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்க முடியும்” - அமைச்சர் ரகுபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.