ETV Bharat / state

“முதலமைச்சர் நினைத்தால் நாளையே பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்க முடியும்” - அமைச்சர் ரகுபதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 3:19 PM IST

Minister Regupathy: உச்ச நீதிமன்றம் பொன்முடி மீதான வழக்கில், தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. முதலமைச்சர் நினைத்தால் நாளையே அவர் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்க முடியும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நினைத்தால் நாளையே பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்க முடியும்
முதலமைச்சர் நினைத்தால் நாளையே பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்க முடியும்

“முதலமைச்சர் நினைத்தால் நாளையே பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்க முடியும்” -அமைச்சர் ரகுபதி!

புதுக்கோட்டை: செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில், அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி புதுக்கோட்டைக் கலைஞர் பூங்காவில் நேற்று (மார்ச் 11) தொடங்கியது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நேற்று தொடங்கி வருகிற 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ள புகைப்பட கண்காட்சியில், அரசின் சாதனைகள், தமிழ்நாடு முதலமைச்சரின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விளக்கப் புகைப்படங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.

புகைப்பட கண்காட்சியைத் துவக்கி வைத்த பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில், உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் நாளையே அவர் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்க முடியும். இந்த தீர்ப்பு எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஒரு பதிலடியாக அமையும்.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் எங்களுக்கு அனைத்தும் சாதகமாக உள்ளது. திமுகவிற்கு அடித்தளம் நன்றாக உள்ளதால் எங்களை எதுவும் செய்ய முடியாது. அடித்தளம் இல்லாத ஒரு சில கட்சிகள், பொய்யான குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தி வருகின்றது. பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள். எந்த ஒரு பொய்யான பிரச்சாரமும் தமிழக மக்களை மாற்றாது.

தமிழக ஆளுநர் புதிதாக ஒரு ஆயுதத்தை தற்போது கையில் எடுத்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் இருந்தால், அதனைத் தமிழக அரசு பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் வெளி மாநிலங்களிலிருந்து தான் வருகிறது.

குறிப்பாக ஆளுநருக்கு வேண்டிய பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் ஆளுகின்ற குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திலிருந்து தான் போதைப்பொருள் வருகிறது என்பது நாடு அறிந்த உண்மை. தமிழகத்தில் போதைப்பொருள் அதிகளவு உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவது வேடிக்கையானது. அவருடைய ஆட்சிக் காலத்தில், அவருடைய அமைச்சர் சகாக்கள் மீது போதைப்பொருள் குற்றம் சாட்டப்பட்டு, தற்போது சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பாஜக மற்றும் அதிமுக போதைப்பொருள் குறித்துப் பேசுவதற்குத் தகுதி கிடையாது. பிரதமர் மோடி மீண்டும் மூன்று நாட்கள் தமிழகத்திற்கு வருகிறார். அவர் 30 நாள் வந்தாலும் 300 நாள்கள் இங்கே தங்கி இருந்தாலும், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் சேவை: காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.