ETV Bharat / state

"ஆண்கள் எல்லாம் எங்கள் மீது கோபமாக உள்ளார்கள்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 6:24 PM IST

Minister Anbil Mahesh Poyyamozhi
Minister Anbil Mahesh Poyyamozhi

Minister Anbil Mahesh Poyyamozhi: திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாக, பெண்களுக்கு நலத்திட்டங்கள் செய்து வருகிறது. பெண்கள்தான் எங்களுக்கான பிரச்சார பீரங்கிகள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சையில் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை கீழவாசல் பகுதியில் இன்று (ஏப்.02) வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "ஆண்கள் எல்லாம் எங்கள் மீது கோபமாக உள்ளார்கள். ஏனென்றால், திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாக, பெண்களுக்கு நலத்திட்டங்கள் செய்து வருகிறது.

திராவிட மாடல் அரசு என்பது, தமிழகத்தில் மட்டும் இருந்தால் பத்தாது, நமக்கான அனுசரணையான அரசு மத்தியிலும் இருந்தால்தான் நாம் கேட்கின்ற நிதியாக இருந்தாலும் சரி, பல்வேறு திட்டங்களாக இருந்தாலும் சரி, நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் வகையில் நம்மை நாடி வரும்.

நம்முடைய பெண்கள் தன்னம்பிக்கையோடு சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுபவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர். அதனால்தான், திட்டங்கள் பெண்களைத் தேடி அதிகப்படியாக வந்து கொண்டிருக்கிறது.

பெண்கள்தான் எங்களுக்கான பிரச்சார பீரங்கிகள். 10 வருடங்களுக்கு முன்பு கேஸ் விலை குறைவாக இருந்தது, இன்றைக்கு அதிகமாக உள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் விலை குறைப்பு என்று பிரதமர் கூறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் வருவது தெரியவில்லையா? தேர்தல் வந்தால் மட்டும் தெரிகிறதா?

மோடி மீண்டும் பிரதமராக வருவதற்காக மகளிர் தினம் மட்டுமல்ல, கிழவிகள் தினத்தைக் கூட கொண்டாடுவார். எல்லா கிழவிகளுக்கும் பாக்கு, வெற்றிலை இலவசமாகத் தருவேன் என்று கூறுவார். அதை நம்பி நீங்கள் வாயைத் திறந்து பார்த்தால், உங்கள் சுருக்குப் பையில் உள்ள ஆயிரம், ஐந்நூறு பணத்தை எடுத்து விடுவார்.

இந்த பிரச்சாரத்தில், தஞ்சை வேட்பாளர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன் மற்றும் நீலமேகம், மேயர் இராமநாதன் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்னதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை மாவட்டம் புதுக்குடி, செங்கிப்பட்டி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, கண்டியூர், கரந்தை உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர் முரசொலியுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையும் படிங்க: தேர்தல் நேரத்தில் பாஜகவினர் கச்சத்தீவை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றனர் - அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.