ETV Bharat / state

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ராக்கெட் தொழில்நுட்பம் தேவையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 8:09 PM IST

சென்னை உயர் நீதிமன்றம் கட்டம்
சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ராக்கெட் தொழில்நுட்பம் தேவையில்லை

Removing Seemai Karuvelam: சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாகச் செயல்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (பிப்.29) நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக, அரசு இதுவரை 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசின் இந்த அறிக்கைக்குக் கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முறையாகச் செயல்படவில்லை எனச் சுட்டிக்காட்டியதுடன், கடமைக்காக இந்த வழக்கை நடத்துவது போல் உள்ளதாகக் கூறினர். வனப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் உள்ள சிரமத்தைப் புரிந்து கொள்வதாகக் கூறிய நீதிபதிகள், சமதளப் பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றுவதில் என்ன சிரமம் எனக் கேள்வி எழுப்பினர்.

ஒரு கிராமம் அல்லது ஒரு பஞ்சாயத்தில் கூட முழுமையாகச் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை எனக் கூறிய நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ராக்கெட் தொழில்நுட்பம் தேவையில்லை எனக் கூறினர். சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு அரசு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமெனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அந்தப் பணிகளை ஏலத்தில் விடலாமே என்று கூறினர். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளை (மார்ச்.1) ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: வரும் கல்வியாண்டில் ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி புதிய கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.