ETV Bharat / state

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லை மக்களவைத் தொகுதி.. திமுக நிர்வாகிகள் அதிருப்திக்கு காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 8:56 PM IST

Nellai Constituency Allotment Issue
Nellai Constituency Allotment Issue

Nellai Constituency Allotment Issue: திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை திமுக தொண்டர்கள், சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக கருத்துக்களைப் பதிவிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

திருநெல்வேலி: வேட்பாளர் அறிவிப்பு, தொகுதிப் பங்கீடு, பிரச்சார தேதி அறிவிப்பு என விறுவிறுப்பாக நாடாளுமன்றத் தேர்தல் களம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழகத்திற்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. இந்த நிலையில், திமுகவில் முதல் கட்டமாக கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளின் பெயர்களை சமீபத்தில் கட்சித் தலைமை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (மார்ச் 20) திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு சில தொகுதிகளில் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த திமுக நிர்வாகிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அந்த வகையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட பல முன்னணி திமுக நிர்வாகிகள் தயாராக இருந்தனர். குறிப்பாக, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக செயல்பட்டு வரும் கிரகாம்பெல், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே நெல்லை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரையில், இதுவரை நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக அதிகபட்சம் ஏழு முறையும், காங்கிரஸ் கட்சி ஐந்து முறையும் மற்றும் திமுக இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது. திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஓரளவுக்கு செல்வாக்கு இருந்து வருவதாக அறியப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, இராதாபுரம், வள்ளியூர் மற்றும் திசையன்விளை போன்ற பகுதிகளி காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியை ஒதுக்குவதால், வெற்றி வாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கப்படாது என்பது திமுக தலைமையின் கணிப்பாக உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக தொண்டர்கள், சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக கருத்துக்களைப் பதிவிட்டு, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் ஆதிபரமேஷ்வரன் தனது பேஸ்புக் பக்கத்தில், கிரகாம்பெல்லுக்கு ஆதரவாக மிக மன வருத்தத்தோடு கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "வாழ்த்துகள், வழக்கம்போல் மீண்டுமொரு முறை தங்களுக்கான வாய்ப்பை திமுக தலைமை மறுத்திருக்கிறது. வந்தேறிகளுக்கும், வாரிசுகளுக்கும், ஐந்து கட்சி அமாவாசைகளுக்கும் வாய்ப்பளித்து வாழ்வளிக்கும் இந்த கழகம், தங்களைப் போன்ற உண்மைத் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க மறுப்பதில் ஆச்சரியமில்லை.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இரட்டை இலை படங்களை தங்கள் உடலில் பச்சை குத்தியிருந்தால் பகுத்தறிவு பேசும் இந்த இயக்கம் தங்களை அரவணைத்திருக்கும். தங்கள் நெற்றியில் எப்போதும் இருக்கும் குங்குமத்தை அழித்திருந்தால் சமூகநீதி காக்கும், இந்த இயக்கம் தங்களை வாஞ்சையோடு வருடியிருக்கும்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட கடந்த காலங்களில், மாற்றுச் சிந்தனையோடு எதிர் முகாமுக்கு தாவ முயற்சித்திருந்தால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பேசும் இந்த இயக்கம், தங்களை ஆரத்தழுவி உச்சி முகர்ந்திருக்கும். ஆனால், மேற்கண்ட எதையும் தாங்கள் செய்யவில்லை, செய்யவும் மாட்டீர்கள் என்ற தைரியத்தில், அதிகாரப் போதையில் சிலர் ஆடும் ஆட்டத்தில் கயவர்களின் காலடியில் கால்பந்தாய் உதைபட்டாலும் இன்முகம் மாறாப் புன்னகையோடு, கலைஞரின் தம்பியாய், மூன்றாம் தலைமுறை திமுகத் தொண்டனாய், நிறம் மாறா இனமானத்தோடு, தடம்மாறா தன்மானத்தோடு, கலைஞர் கட்டிக் காத்த இவ்வியக்கத்தில், தளபதியார் தலைமையில் பயணித்துக் கொண்டிருக்கும், தொடர்ந்து பயணிக்கவிருக்கும் தங்களின் தன்னம்பிக்கைக்கும், கழகப் பற்றிற்கும், மீண்டுமொரு முறை எம் இதயம் கனிந்த அன்பின் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆதிபரமேஷ்வரனின் கருத்துக்கு திமுக நிர்வாகிகள் பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் 2024; என்ன செய்தார் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.