நாடாளுமன்ற தேர்தல் 2024; என்ன செய்தார் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 2:55 PM IST

thoothukudi MP Kanimozhi

Thoothukudi MP Kanimozhi:முதலமைச்சரின் தங்கையாக இருந்தும் கூட கனிமொழி வாய்ப்புகளை பயன்படுத்த தவறவிட்டார் என எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில், குலசை ராக்கெட் ஏவுதளம், வெள்ள காலத்தில் களத்தில் நின்று பணியாற்றியது உள்ளிட்ட பணிகளை முன்வைக்கின்றனர் திமுகவினர்.

தூத்துக்குடி: தென்னகத்தின் நுழைவு வாயிலாக இருக்கும் தூத்துக்குடி திருமந்திர நகர், முத்துநகர் என அழைக்கப்படுகிறது. காரணம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்கி வருகிறது.

மாவட்டத்தின் சிறப்புகளை அடுக்கத் தொடங்கினால், திருச்செந்தூர் கந்தசஷ்டி,குலசை முத்தாரம்மன் கோயில் தசரா,பனிமய மாதா ஆலய திருவிழாவில் தொடங்கி கட்டபொம்மன் கோட்டை, பாரதியாரின் வீடு, உமறுப்புலவர், கால்டுவெல் என அந்தப் பட்டியல் தூத்துக்குடி எண்ணெய் புரோட்டா,மக்ரூனில் வந்து முடிகிறது. இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடி தங்களது உடல், உயிர், உடமை என அனைத்தையும் இழந்த வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்களே.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமியில் தொடங்கி, கோணங்கி,பூமணி, தேவதச்சன், சோ.தர்மன் என பெரும் பட்டாளமே இன்றைக்கும் கோவில்பட்டியை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இலக்கியத்தில் முக்கியமான ஆளுமைகளைத் தந்த மாவட்டம் என்ற பெருமையை தூத்துக்குடி ஏந்தி நிற்கிறது. இயற்கை தந்த பரிசாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த உகந்த இடமாக குலசை தேர்வு செய்யப்பட்டு தற்போது அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைகிறது. அந்த வகையில், வரலாற்றுக்கும், வளர்ச்சிக்கும் பஞ்சமில்லாமல் புகழை ஏந்தி இருக்கிறது தூத்துக்குடி.

தொகுதி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 1986ம் ஆண்டு பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2009ம் ஆண்டு தொகுதி மறுசீரமைக்கப்பட்டு புதிய தொகுதியாக தூத்துக்குடி உருவான நிலையில் இது வரை 3 முறை மக்களவை தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. தமிழகத்தின் 36வது தொகுதியாக உள்ள இந்த தொகுதியில் தூத்துக்குடி,கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில், 14 லட்சத்து 48 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 7 லட்சத்து 8 ஆயிரத்து 234 பேர் ஆண்கள், 7 லட்சத்து 39 ஆயிரத்து 710 பேர் பெண்கள், 215 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இது வரை 3 மக்களைவை தேர்தலை கண்ட தூத்துக்குடி தொகுதியில், திமுக 2 முறையும், அதிமுக ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளது. 15வது மக்களவை தேர்தலில் திமுகவின் எஸ் ஆர் ஜெயதுரையும், 16வது மக்களவை தேர்தலில் அதிமுகவின் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியும், 17வது மக்களவை தேர்தலில் திமுகவின் கனிமொழி கருணாநிதியும் தொகுதியை கைப்பற்றினார்.

கருணாநிதியின் மகள் டூ எம்.பி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள், முதலமைச்சர் ஸ்டாலினின் தங்கை என்பதை தாண்டி எழுத்தாளர், கவிஞர், திராவிட இயக்கத்தின் தீவிர ஆதரவாளர், பெண் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர் என பன்முகத்தன்மை கொண்டவர்தான் கனிமொழி. எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கனிமொழி தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக இந்து நாளேட்டிலும், சிங்கப்பூரில் இயங்கி வந்த தமிழ் முரசு இதழில் பணியாற்றினார். இவரது கவிதைகள், இவரை நவீன கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காட்டியது.

இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் கருணாநிதிக்கு எப்போதுமே இருந்திருக்கிறது. பலரும் வலியுறுத்தியதன் அடிப்படையில், 2007ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் கனிமொழி. அப்போது, இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மையப்படுத்தி ஆற்றிய இவரது உரை அனைவரையும் அசர வைத்தது. கபில் சிபல், மன்மோகன் சிங் போன்ற ஆளுமைகள் இவரது உரையை பாராட்டியுள்ளனர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கனிமொழி மீது குற்றச்சாட்டப்பட்டு திகார் சிறையில் 6 மாதங்கள் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராக உரிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என வழக்கிலிருந்து அனைவரையும் விடுவித்தனர். கனிமொழி முதல்முறையாக மக்களவை தேர்தலைச் சந்தித்தது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தான். அந்த தேர்தலில், அவரை எதிர்த்து தூத்துக்குடி தொகுதியில் களமிறங்கியது அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.

திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 5 லட்சத்து 63 ஆயிரத்து 143 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனை விட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகளை பெற்றார். கனிமொழியைப் பொறுத்தவரை துவக்கத்திலிருந்து அவருடைய நாடாளுமன்ற உரைகள் அதிகம் கவனிக்கப்படுகின்றது. இந்தி மொழியை திணிக்காதீர்கள் என இவரது எதிர்ப்பு குரல் பலரையும் ரசிக்க வைத்தது. சமீபத்தில், 'ஆத்ம நிர்பார் பாரத் அபியானி' என்ற திட்டத்தை உச்சரிக்க சிரமப்பட்ட கனிமொழி, நான் தமிழில் பேசுகிறேன். உங்களுக்கு புரியுதா? என்று சொல்லுங்கள் என சிரித்து கொண்டே சொன்னது யாராலும் மறந்து விட முடியாது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு வலுவான பெண் அரசியல் தலைவர்கள் பட்டியலில் கனிமொழியை மக்கள் பார்க்கின்றனர். பெண்ணியக் கருத்துக்கள், ஆண் பெண் சமத்துவம் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடைகள், கவிதைகள் மூலம் பேசி வருகிறார் கனிமொழி. ஆனாலும், அவரால் தொகுதிக்கு எதிர்பார்த்த வளர்ச்சியைக் கொண்டுவர முடியவில்லை. பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன என குற்றச்சாட்டுகளை எடுத்து வைக்கின்றனர் தொகுதி மக்கள்.

பார்லிமென்ட் பெர்ஃபாமன்ஸ்: நாடாளுமன்ற பங்கெடுப்பில் 69 சதவீத வருகைப்பதிவை உறுதி செய்த கனிமொழி, தீப்பெட்டி தொழிலுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்கக் கோருதல், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என 65 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 182 கேள்விகளை எழுப்பியுள்ளார். இவர், கொண்டு வந்த இரண்டு தனிநபர் மசோதாகள் நிலுவையில் உள்ளன.

வாக்குறுதிகள்: மாணவர்களின் கல்விக்கடன், விவசாயிகளின் அனைத்து வகை கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட், விவசாய பொருட்களை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கப்படும். மீனவர் நலனுக்காக தனி கேபினட் அமைச்சரவை உருவாக்கப்படும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், மீன்பிடித்துறைமுகங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் வங்கி அமைக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தரமான சாலைகள், குடிநீர் வசதிகள் செய்து தரப்படும். படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்படும் என பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

செய்யத்தவறியவை: வைப்பாறு ஆற்றுப்படுகையில் தினமும் திருட்டுத்தனமாக மணல் கொள்ளை போகிறது. மாட்டுவண்டி வைத்து மணல் எடுக்கும் சுமார் 300 தொழிலாளர்கள், மணல் எடுக்க தங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என ஆறு ஆண்டுளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனை எம்.பி கண்டுகொள்ளவில்லை. புதியம்புத்தூர்தான் ரெடிமேட் ஆடை தொழிலை நம்பி மட்டுமே 10 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளனர்.

இதனால், 'ரெடிமேட் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும்' என்பது இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. அதற்காகவும் எம்.பி முயற்சிக்கவில்லை. ஶ்ரீவைகுண்டத்தில் வாழைத்தார் பதப்படுத்தும் நிலையம் இதுவரை அமைப்படவில்லை. இப்பகுதியில், மழைக்காலங்களில் அதிகப்படியாக வெளியேறும் தண்ணீரைச் சேமித்து வைக்க பெரிய தடுப்பணைகளும் ஏதும் இல்லை என தொகுதி மக்கள் கொந்தளித்தனர்.

5 வருடங்களில் வளர்ச்சிப் பணிகள் செய்யவில்லை: முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கூறுகையில், “தூத்துக்குடி தொகுதியில் சொல்லிக் கொள்ளும் படி எம் பி கனிமொழி எந்த வளர்ச்சி திட்டங்களும் செய்யவில்லை. தூத்துக்குடி விமான நிலையம் அதிமுக ஆட்சி காலத்தில் தான் கொண்டு வரப்பட்டது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மத்திய நிதியமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் பெரும் முயற்சியால் கொண்டு வரப்பட்டு அதன்பின், விமான நிலைய விரிவாக்கத்திற்கு அதிக நிலங்கள் தேவைப்பட்டதால் அப்போது நான் அமைச்சராக இருந்த நேரத்தில் 31.12.2019 அன்று 601 ஏக்கர் விரிவாக்கத்திற்கு முதலாவதாக கொடுத்தோம்.

முதலமைசரின் தங்கையாக வாய்ப்பை பயன்படுத்தவில்லை: அதன் பின்னும் 150 ஏக்கர் நிலம் என 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி 2020ல் ஒப்படைக்கப்பட்டு விட்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் பன்னாட்டு விமான நிலையத்தை விரைவாக கனிமொழி முயற்சி எடுத்து செய்து இருக்க வேண்டும்.ஆனால் அவர் செய்யவில்லை. தூத்துக்குடியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு, அடிக்கல் நாட்டப்பட்டது. அதுவும் கிடப்பில் தான் போடப்பட்டுள்ளது. இவர், முதலமைச்சரின் குடும்பத்தை சார்ந்தவர். இதன் மூலமாக கூட இந்த வாய்ப்பை பயன்படுத்தி வளர்ச்சி திட்டங்களை செய்து இருக்கலாம். ஆனால் அவர் செய்யத் தவறிவிட்டார்” என்றார்.

நாடாளுமன்றத்தில் தீப்பெட்டி தொழிலுக்காக குரல் கொடுத்தார்: இந்திய சிறு, குறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்திக்கு அடுத்தபடியாக தீப்பெட்டி தொழில் தான் பிரதான தொழிலாக உள்ளது. தீப்பெட்டி தொழிலை நம்பி 2 லட்சம் தொழிலாளர்கள் அதாவது, 90 சதவிகிதம் பெண்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் 18 சதவிகிதம் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டு தொழில் மிகவும் தள்ளாட்டம் கண்டது.

அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள், தீப்பெட்டி தொழிலார்கள் ஆகியோரின் கோரிக்கைகளின் அடிப்படையில், கனிமொழி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். அதன் விளைவாக 18ல் இருந்து 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.ஆனால் அதே நேரம் தீப்பெட்டியின் மூல பொருட்கள் பொட்டாசியம் குளோரைடு, சல்பர், மெழுகு, அட்டை, குச்சி போன்ற பொருட்கள் கடுமையான விலையேற்றத்தை சந்தித்ததன் காரணமாக தீப்பெட்டியின் அடக்க செலவு அதிகரித்து இருக்கிறது.

ஆனால் விற்பனை விலை கிடைக்கவில்லை. இதனால் தீப்பெட்டி தொழில் வட மாநிலங்களில் விற்பனை செய்யமுடியவில்லை.தற்போது பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்ததின் காரணமாக 25 ரூபாய்க்கு கீழ் சிகரெட் லைட்டர்கள் விற்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தாலும் கூட தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சிகரெட் லைட்டர்கள் 10, 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் தீப்பெட்டி தொழில் பாதிப்படைந்து விட்டது” என்கிறார்.

ரயில் சேவை இல்லை: தெற்கு ரயில்வே மதுரை கோட்ட பயணிகள் நல சங்க ஆலோசனை குழு உறுப்பினர் பிரம்மநாயகம் கூறுகையில், தூத்துக்குடி மாநகரம் தொழில் வளர்ச்சி மட்டுமின்றி துறைமுக நகரமாகவும் உள்ளது. தூத்துக்குடியில் அனைத்து மார்க்கங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது ரயில்வே மார்க்கத்தை தவிர. ஆகாயம், கடல் வழி, சாலை மார்க்கம் என அனைத்தும் வளர்ந்த நிலையில் ரயில்வே மார்க்கம் மட்டும் வளரவில்லை.

தூத்துக்குடிக்கு என்று கடந்த 5 வருடமாக சிறப்பு ரயில்கள், ரெகுலர் ரயில்கள் வராமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இது குறித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளோம். அதில், தூத்துக்குடி-யில் இருந்து கோவைக்கு இரவு நேர ரயில் வேண்டும். அதேபோல் திருநெல்வேலியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இரவு, பகல் என கூடுதல் ரயில் இயக்க வேண்டும் மற்றும் சில வாராந்திர ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கூறினோம்.

கனிமொழி குரலுக்கு செவி சாய்க்காத மத்திய அரசு: ஆனால், இதனை 2 முறை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது மட்டுமின்றி ரயில்வே துறை அமைச்சர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார். ஆனால் இன்று வரை மத்திய அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை” என்கிறார்.

கனிமொழி செயல் வரவேற்கத்தக்கது: தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு சங்க ஒருங்கிணைப்பாளர் ரீகன் கூறுகையில், “கடந்த தேர்தலில் மீனவர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தப்படி, மீனவர்களுக்கான நிவாரண தொகை 6 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மானிய டீசல் அதிகப்படியாக 300 லிட்டர் டீசல் வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. மேலும், வாக்குறுதிகளான, துண்டில் வளைவு நடைமுறை படுத்தப்படவில்லை.

கேள்விக் குறியான 'கடல் ஆம்புலன்ஸ்' வாக்குறுதி: திரேஸ்புரம் பகுதியில் உள்ள பக்கிள் ஓடை சீரமைப்பு இதுவரை நடைமுறைபடுத்தவில்லை. அதனையும் சீர் செய்ய வேண்டும்.மீன்பிடித்தலின் போது படகு விபத்துகளில் சிக்கி தவிக்கும் மீனவர்களை உடனடியாக காப்பாற்றவும், முதலுதவி செய்யவும் நவீன வசதிகளுடன் கூடிய 'கடல் ஆம்புலன்ஸ்' (Sea Ambulance) ஏற்படுத்தி தருவதாக தேர்தல் சமயத்தில் சொன்னார் அது நிறைவேற்றப்படவில்லை” என்கிறார்.

முக்கியமான கோரிக்கைகளைக்கூட கண்டுகொள்ளவில்லை: விளாத்திகுளம் தொகுதியில் மிளகாய் வத்தல், மல்லி சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. 'மானாவரி விவசாயத்தை ஊக்கப்படுத்தவும், வத்தல், மல்லி சேமிப்பு கிடங்கி கூடுதலாக அமைக்கவும், கொள்முதல் நிலையம் அமைக்கவும் இதுவரை எந்த நடவடிக்கையும் கனிமொழி எடுக்கவில்லை என்கிறார்கள் அந்த சட்டமன்றத் தொகுதியின் மக்கள்.

அவசர கால, விபத்து கால சிகிச்சைக்கான வசதிகள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் இல்லாததால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்தப் பிரச்னையையும் எம்.பி கண்டுகொள்ளவில்லை என்கிற வருத்தம் நிரம்பவே இருக்கிறது” என அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.

களம் காண காத்திருப்பவர்கள்: தூத்துக்குடி தொகுதியில், மீண்டும் கனிமொழியே போட்டியிடுகிறார். தெலங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ள தமிழிசை செளந்தரராஜன், பாஜக சார்பில், தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் தேர்தலில், தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தோல்வியுற்றார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த ராதிகா- சரத்குமார் தம்பதியினரில், ஒருவர் தூத்துக்குடியில் களமிறங்கலாம் எனவும் கருத்து உலா வருகிறது.

அதிமுக: தூத்துக்குடி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக வைத்தியர் சிவசாமி வேலுமணி களமிறங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இவர், சென்னை தியாகராய நகர் பகுதி அதிமுக செயலாளரும், வடபழனி புத்தூர் கட்டு வைத்தியரும் ஆவார்.

நாம் தமிழர் கட்சி: வழக்கம் போல அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர், தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக மருத்துவர் ரொவினா ரூத் ஜேன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த முறை கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களம் கண்டார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் செய்ததும்..! செய்யத் தவறியதும்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.