ETV Bharat / state

'நெல்லை மாவட்டத்தில் 333 பதட்டமான வாக்குச்சாவடிகள்' - ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 11:29 AM IST

lok sabha election in Tirunelveli lok sabha constituency
lok sabha election in Tirunelveli lok sabha constituency

Tirunelveli lok sabha constituency: திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் 1810 வாக்குச்சாவடிகள் உள்ளது, இதில் 333 பதட்டமான வாக்குச்சாவடிகளும், 13 மிக பதட்டமான வாக்குச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி, மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொறுத்தவரையில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மாவட்டம்தோறும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்தது.

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 18004258573 மற்றும் 1950 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் மூலம் தங்களது புகார்களைக் கூறலாம். பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி உட்பட 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.

ஆறு தொகுதிகளிலும் மொத்தமாக, 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 44 ஆயிரத்து 284 பெண் வாக்காளர்களும், 152 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் 1,810 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 333 பதட்டமான வாக்குச்சாவடிகளும், 13 மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா மூன்று பறக்கும் படை, மூன்று நிற்கும் படை ஆகியவை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

85 வயதுக்கு மேற்பட்ட தபால் வாக்குகள் பெரும் வாக்காளர்களாக 23,100 பேர் கண்டறியப்பட்டுள்ளது. நூறு வயதுக்கு மேற்பட்டோர் என 795 பேர் இருப்பதாகவும் கூறினார். மாநகராட்சி ஆணையர் தாக்ரேசுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் பணி! விழுப்புரத்தில் சோதனையில் களமிறங்கிய பறக்கும் படை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.