ETV Bharat / state

சூடுபிடிக்கும் தேர்தல் பணி! விழுப்புரத்தில் சோதனையில் களமிறங்கிய பறக்கும் படை..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 9:00 AM IST

Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில் பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்க விழுப்புரத்தில் பறக்கும் படை சோதனை தொடங்கியுள்ளது.

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

விழுப்புரம்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என நேற்று (மார்ச் 16) இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20ஆம் தேதி தொடங்கும் நிலையில், 27ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாளாகும்.

மேலும், 28ஆம் தேதி வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 30ஆம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது.

மேலும், தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்கும் வகையில், பறக்கும் படை அமைத்து தீவிரமாகக் கண்காணிக்கும்படி, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில் பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்க, விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனை நேற்றிரவே (மார்ச் 16) தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக மொத்தம் ஆயிரத்து 966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் நாளன்று, இம்மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 12 ஆயிரத்து 95 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், திருக்கோவிலூர், வானூர், மயிலம், செஞ்சி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், தேர்தல் விதிமீறல்களை கண்டறிவதற்காக, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 21 பறக்கும் படைகள் மற்றும் தொகுதிக்கு 3 நிலையான கண்காணிப்புக் குழு வீதம் 21 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் பறக்கும் படை குழுவில் ஒரு அரசு அதிகாரியும், 3 போலீசாரும், நிலையான கண்காணிப்புக் குழுவில் ஒரு அரசு அதிகாரியும், 2 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இக்குழுவினர் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வசதியாக, ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாக வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அந்த வாகனங்களில் தேர்தல் பறக்கும் படை என்பதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்புக் குழுவினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளனர். இக்குழுவினர் மாவட்டத்தின் முக்கிய சாலையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை யாரேனும் கொண்டு செல்கின்றனரா? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர். இக்குழுவினர் 8 மணி நேர முறைப்படி, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில், தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி, பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் சி.பழனி நேற்றிரவு முதல் நேரில் பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் உட்பட பலர் இருந்தனர்.

இதையும் படிங்க: 7 கட்டங்களாக நடக்கிறது நாடாளுமன்ற தேர்தல்.. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.