ETV Bharat / state

கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்.. தடியடி நடத்தி திருவிழாவை முடித்து வைத்த போலீஸ்! - Group clash in Dindigul

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 12:33 PM IST

GROUP CLASH IN DINDIGUL
கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்

GROUP CLASH: திண்டுக்கல் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்.

கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகேயுள்ள அம்மையநாயக்கனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து கடந்த பத்து நாட்களாக பல்வேறு சமூக மண்டகப்படியில் பல அவதாரங்களில் எழுந்தருளி, நகர்வலம் வந்த முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் திருவிழாவின் கடைசி நாளான நேற்று கிடா வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், அம்மன் நகர்வலம் வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பின் இரவு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் முத்தாலம்மன் கோயில் முன் வைக்கப்பட்டிருக்கும் வழுக்கு மரத்தில் ஏறும் நிகழ்வு நடைபெறும். இதன் பின்னரே அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இறுதி நாளான நேற்று தாரை தப்பட்டை, வானவேடிக்கைகள் முழங்க, மஞ்சள் நீராடி முளைப்பாரி ஊர்வலத்துடன் கடைவீதி பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோஷ்டி மோதல்: திருவிழா தொடங்கிய நாள் முதலே இரு தரப்பினர் இடையே மோதல் போக்கு இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நிகழ்ச்சியில் இரு பிரிவினரும் தனி தனித்தனியாகக் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் பகையைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் கும்பலாக மாறி மாறி சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதனால் திடீரென அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல காட்சி அளித்தது.

இந்த கட்டுக்கடங்காத தாக்குதல் அதிகரிக்கவே சுதாரித்துக் கொண்ட அம்மையநாயக்கனூர் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

இதன் பின்னர் போலீசார் உதவியுடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இருப்பினும் அசம்பாவிதங்கள் ஏற்படாவண்ணம் அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய மீனவ சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு - அமைப்புச் செயலாளர் சேவியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.